Wednesday, November 9, 2016

76 - நீரில் குதித்தேனோ கணப்புரத்தாளைப் போலே

ஒருசமயம், ஸ்ரீநம்பிள்ளை, ஒரு சிறிய படகில் காவிரி நதியைக் கடந்துக் கொண்டிருந்தார்.

இரவு நேரம்..இருள்..நதியில் வெள்ளம் வரும் அபாயம்..

பாதை வழியில், படகுக் காரன், படகில் இருப்பவர்களிடம், "படகின் பாரம் அதிகமாய் உள்ளது.யாரேனும் நீந்தத் தெரிந்தவர் படகில் இருந்து  நீரில் குதித்தால்..மற்றவர்களைக் காப்பாற்ற இயலும்" என்றான்

நீர் மட்டம் ஏறிக்கொண்டே இருந்தது.

அப்போது, கணப்புரத்தாள் என்ற பெண், படகுக் காரரிடம் "எங்கள் ஆச்சாரியார் நம்பிள்ளையைக் காப்பாற்றுங்கள்.நீங்கள் நூறு வயது வாழ்வீர்கள்' என வாழ்த்திவிட்டு, காவிரி ஆற்றில் குதித்து விட்டாள்

படகும் சற்று பாரம் குறைந்ததால், முழுகிவிடாது கரை சேர்ந்தது.

ஆனாலும், நம்பிள்ளைக்கு தமக்காக ஒரு பெண் தண்ணீரில் குதித்து விட்டாரே என்ற வருத்தம் ஏற்பட அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்

அப்போது, எங்கிருந்தோ கணப்புரத்தாள் குரல் கேட்டது"சுவாமி! நான் பத்திரமாக இருக்கிறேன்.சிறு தீவு ஒன்றிற்கு வந்து விட்டேன்.தாங்கள் கவலைப்பட வேண்டாம்"

நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார்.பின், படகுக்காரன் , படகை எடுத்துச் சென்று அவரை காப்பாற்றி அழைத்து வந்தான்.

வந்தவர், நம்பிள்ளையை நமஸ்கரித்து, "சுவாமி! தாங்கள்தான் சிறு தீவு உருவில் வந்து எனைக் காத்தீர்கள்" என்றாள்
"உனது நம்பிக்கை அதுவானால் அப்படியே இருக்கட்டும்" என்றார் நம்பிள்ளை

ஆச்சாரியாரின் உயிரைக் காப்பாற்ற நீரில் குதித்த கணப்புரத்தாளைப் போல நான் செய்தேனா..இல்லையே..ஆகவே..நான் இங்கிருந்தால் என்ன..வெளியேறினால் என்ன என்று கேட்டாள் திருக்கோளூர்ப் பெண் 

1 comment:

  1. ஆச்சாரியாரின் உயிரைக் காப்பாற்ற தக்க மனத்தினை கொடுக்க வேண்டும் நாராயணாய...

    ReplyDelete