Monday, November 14, 2016

44- பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போல

கிருஷ்ணரும், பலராமரும்..கம்சனைக் காண மதுரா வருவதற்கு முன் , ஒரு வண்ணானிடம் அணிந்து செல்ல துணியைக் கேட்க, அவன் கொடுக்க மறுக்கிறான்.பின், அவனைத் தோற்கடித்து, துணிகளை எடுத்து அணிந்து செல்கின்றனர்

பின் அவர்கள்..மணமுள்ள மலர்களை அணிய விரும்புகிறார்கள்.அதனால், ஒரு பூ வியாபாரியிடம் செல்கின்றனர்.அவன் இவர்கள் இருவரைப் பார்த்ததும் யாரென அறிந்து கொண்டான்.தன்னிடமிருந்த மணம் மிகுந்த மலர்களை அவர்களுக்கு கொடுக்கிறான் (அவனது பெயர் சுதாமன் என் கிறது பாகவதம்)

மலர்ந்த தாமரைப் போலக் காணப்பட்ட அவர்கள், மனம் மகிழ்ந்து அவன் கேட்ட வரங்களை அளிக்கின்றனர்

ஆழ்வார்களும், ஆச்சார்யாக்களும்  எம்பெருமானை மலர் வழிப்பாடு செய்ய இது காரண்மாக அமைந்தது எனலாம்

அப்படிப்பட்ட மாலாகாரர் (மாலைக்காரர்) போல எம்பெருமானுக்குப் பூவைக் கொடுத்தேனோ..(இல்லையே..ஆதலால் நான் இவ்வூரில் இருந்தால் என்ன..வெளியேறினால் என்ன) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Sunday, November 13, 2016

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

உள்ளே புகுமுன் -

ஆண்டவன் அருளியது பகவத் கீதை

 ஸ்ரீராமானுஜருக்கு ஒருபெண் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்லை ரகசியம்
  
108 திவ்விய திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், மதுரகவியாழ்வார் அவதரித்தத் தலம்.இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் "வைத்த மாநிதிப் பெருமாள்"

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்ற திருக்கோளுர் திவ்ய தேசத்திற்கு எம்பெருமானார் திருநகரியிலிருந்து எழுந்தருளினார் 

ஊருக்கு சற்றுத் தொலைவில் அவர் வந்த போது, ஒரு பெண்மணி ஊரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்தார்.
.
அந்த ஊர் புகும் ஊர் என்றும், அங்கு வசிப்பது பெரும்பாக்கியம் என்று பலரும் கருதும் போது, இந்தப் பெண் மட்டும் ஏன் ஊரைவிட்டு வெளியே செல்கிறாள்? என்று ராமானுஜருக்கு ஆச்சரியம்.அப்பெண்ணிடம் . அவள் ஊரை விட்டு வெளியே செல்வதற்கானக் காரணத்தைக் கேட்டார் 

அதற்கு அந்தப் பெண், "சுவாமி, முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன" என்றாள் விரக்தியுடன் 

 அதைக் கேட்ட ராமானுஜர், ‘‘அம்மா, உனக்குக் குறைதான் என்ன?’’ என்று விசாரித்தார். 

‘‘ஒன்றா, இரண்டா….?’’ என்று தொடர்ந்து ஏக்கத்துடன் கேட்ட அவள், 81 வைணவப் பெரியார்கள் எத்தனையோ பேர் எத்தனையோ அருஞ்செயல்களைப் புரிந்திருக்கிறார்கள். அதுபோன்ற அவர்களுடைய வைணவ நலன்கள்  ஒன்றுகூடத் தனக்கு வாய்க்கவில்லையே,’’ என்று வருந்திக் கூறினாள். 

அந்தப் பெண்மணி, வைணவ நலன்கள் என  மொத்தம் எண்பத்தோரு வைணவப் பெரியார்களின் செயல்களை  பெண்பிள்ளை பட்டியலிட்டாள். இப்படி அவள் கூறிய வாசகங்களின் மறைபொருளைக் கொண்ட  நூல், ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!’ இது வைணவ ரகசியக் கிரந்தங்களுள் ஒன்று என்று போற்றப்படுகிறது. 


அந்த பெண்மணி கூறியவற்றைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தார் ராமானுஜர்.சாதாரணப் பெண்மணிக்கே இவ்வளவு ஞானம் இங்கு உள்ளதே என வியந்தார்.பின், அவளை சமாதானப்படுத்தி அவள் அவளுடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார். அவள் சமைத்த உணவை உண்டார்

அவள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வைணவத்தைச் சாறு பிழிந்து கூறுவது போல இருந்தது.அவற்றை சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது, அப்பெண்ணின் ஞான அறிவைக் கூறுகிறது

மறைமுகமாக அவள் சொன்னவை திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனப்படுகிறது.. 

81 - துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

திருவயினந்தபுரத்தில் வில்லிபுத்தூர் பகவர் என்பவர் வசித்து வந்தார்

அவர் தினசரி குளிக்கச் செல்லும் போது, எப்போதும் மற்றவர்கள் குளிக்கும் துறையை விட்டுவிட்டு வேறு துறைக்குச் சென்று குளிப்பார்

ஒருமுறை அந்தணர்கள் அவரிடம், நீங்கள் ஏன் நாங்கள் குளிக்கும்துறையிலேயே குளிப்பதில்லை?" என்று கேட்டனர்..

அதற்கு   பகவர் சொன்னார், "நான் வைஷ்ணவன்.ராமானுஜரைப் பின்பற்றுபவன்.நாங்கள் நித்ய அனுஷ்டானத்தை ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்கிறோம்.ஆனால், நீங்கள் வர்ணாஸ்ரமத்தைப் பின் பற்றுபவர்கள்.இவை இரண்டும் ஒன்று சேராது.ஆகவேதான் நான் வேறு துறை செல்கிறேன்" என்றார்

(பகவர், ஒரு அந்தணரோ அல்லது சந்நியாசியோ அல்ல என்பதை நினைவில் கொள்க)

நான் அந்த பகவரைப்போல வைணவ நம்பிக்கையில் வேறு துறை செய்தேனோ (சென்றேனோ) இல்லையே..ஆகவே நான் இங்கு இருந்தால் என்ன வேரு ஊருக்குச் சென்றால் என்ன என் கிராள் திருக்கோளூர்ப் பெண்

Saturday, November 12, 2016

80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

எம்பெருமான் பல்லக்ககில் வீதி உலா வருகிறார்.அப்போது அதற்கு முன்னால் சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்தி வருகிறார்கள் இருவர்.

அப்படி சவுக்கை அடிக்கும் போது..ஒருமுறை அது பட்டரின் தோள்பட்டையில் அடியாக விழுகிறது.

அப்படி தெரியாமல் அடித்து விட்டதால் அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, "பட்டரோ..அதனால் பரவாயில்லை.எம்பெருமான் கைங்கரியத்தின் போது  விழுந்த அடி.மற்றொரு தோளிலும் விழவில்லையே என வருந்தினாராம்,

இதற்கு மற்றொரு விளக்கமும் சொல்வார்கள்...

எம்பெருமானுக்கு பல்லக்குத் தூக்கி சேவை புரிந்து வந்தவர் ஒருவரின் அந்திமக் காலம்.அவர் உயிர் போகும் நேரம் எம தூதர்களுக்கும், விஷ்ணு தூதர்களுக்கும் மேலே தர்க்கம் நடக்கிறதாம்

எமதூதர்கள் அவர் உயிரை எமலோகத்திற்கு எடுத்துச் செல்லக் காத்திருக்கிறார்கள்

விஷ்ணு தூதர்களுக்கோ, எம்பெருமானுக்கு இவர் பல்லக்குத் தூக்கி ஆற்றிய பணியால், இவரை வைகுண்டம் அழைத்துச் செல்ல இருக்கின்றனர்

இதை அறிந்தவர்.."அடடா..எம்பெருமானுக்கு நான் ஆற்றிய இந்த சேவைக்கே இப்படி ஒரு பயனா" என வியந்து, பராசர பட்டரிடம் தனக்கு பஞ்சசமஸ்காரம் செய்ய வேண்டினார்.

அதற்கு பட்டர், அதற்கான நேரம் இல்லை என்று கூறி, பல்லக்குத் தூக்கிய வைஷ்ணவரின் தோள்கள் காய்த்துப் போயிருப்பதைக் காட்டி..இதுவே பஞ்ச சமஸ்காரம் உமக்கு என்றார்

அப்படி தோள்காட்டி சொன்ன பட்டரைப் போல நான் சொன்னேனா இல்லையே என திருக்கோளூர்ப் பெண் கூறுகிறாள்  

Friday, November 11, 2016

79- வாயில் கைவிட்டேனோ எம்பாரைப் போலே

முதலில் கோவிந்த பட்டராய் இருந்த ஆச்சார்யார் எம்பார், ராமானுஜரின் உறவினர்

இவர் ஒருமுறை காசிக்குச் சென்று கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது.அதை எடுத்து வந்து காளஹஸ்தியில் வைத்து கோயில் கட்டினார் அவர்

பெரிய திருமலை நம்பியிடம், திருமலையில் ராமாயணத்தின் உள்ளர்த்தங்களை அறிந்து கொண்டிருந்த ராமானுஜர் எம்பார் பற்றி சொல்ல..அவரை திருமலைநம்பி, வைணவத்தில் ஈடுபட வைத்தார்.

ஒருசமயம், எம்பார்..தன் கையை , வாயைத் திறந்து கொண்டிருந்த ஒரு பாம்பின் வாயில் வைத்திருந்தார்.

இதைக்கண்ட ராமானுஜர், "பாம்பின் வாய்க்குள் கைவைக்கலாமா?"என வினவினார்.

உடனே எம்பார் சொன்னார்.."அந்த பாம்பு தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது.நாக்கினுள் முள் ஒன்று தைத்திருந்தது.அதை எடுத்து விட்டேன்.அது ஓடிவிட்டது.'என்றார்.

மேலும் சொல்கையில், "வைணவனின் அடிப்படை தர்மம் மனித நேயம், கருணை, இரக்கம். அதனால் பாம்பினிடம் இரக்கப்பட்டு, மனித நேயத்தால் அதன் வாயினுள் கையைவிட்டேன்" என்றார்

அந்த எம்பாரைப் போல கருணை உள்ளத்தோடு பாம்பின் வாயில் கையை விட்டேனோ (இல்லையே! ஆகவே நான் இந்த ஊரில் இருந்தால் என்ன..வெளியே போனால் என்ன) என்கி றாள் திருக்கோளூர்ப் பெண்

78 - வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே

கூரத்தாழ்வாரின் மகன் பராசர பட்டர்.அவர் குழ்ந்தையாக இருந்த போது, காவிரி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்

அப்போது, சர்வக்ஞ பட்டர் என்பவர் பல்லக்கில் ஏறி தனது சிஷ்யர்கள் படைசூழ வந்து கொண்டிருந்தார்.சிஷ்யர்கள் அவர் புகழைப் பாடி வந்தார்கள்

ராமானுஜர், கூரத்தாழ்வார்,முதலியாண்டான்,எம்பாரும் வசிக்கும் ஊரில் இப்படி ஒருவர் வருவதை பராசர பட்டர் விரும்பவில்லை.

தன் கையினால் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்ட அவர், அந்த பல்லக்கை தடுத்து நிறுத்தி சர்வக்ஞரிடம், நீங்கள் திறமைசாலி எனில், என் கையில் உள்ள மண் எவ்வளவு என சொல்ல முடியுமா? என்றார்.

"மண் கோடிக்கணக்கில் இருக்கும்...மண்ணை எண்ண முடியுமா" என்ற சர்வக்ஞர் கேலியாக சிரித்தார்

உடனே பராசரர்.."என்னால் சொல்ல முடியும்" என்றார்.

வியந்த சர்வக்ஞர்"சொல் பார்ப்போம்" என்றார்

"ஒரு கைப்பிடி மண்" என்றார் பட்டர்

சிறுவனின் திறமையைக் கண்டு தலைவணங்கிய சர்வக்ஞர். அந்தக் குழ்ந்தை யார் என வினவ..கூரத்தாழ்வாரின் மகன் என அறிந்தார்.

குழ்ந்தையை தன் பல்லக்கில் ஏற்றி வந்து கூரத்தாழ்வார் வீட்டில் கொண்டு வந்து விட்டார்

வாசலில் பிள்ளை உறங்காவில் தாசரின் மனைவி பொன்னாச்சியார் குழ்ந்தையை அதன் தாய் ஆண்டாளிடம் ஒப்படைத்து, "குழ்ந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.கெட்ட கண்கள் அவர் மீது பட்டுவிடப் போகிறது" என்றாள்

பின்னாளில்..பராசர பட்டர் வளர்ந்ததும், ராமானுஜரின் அந்திம காலத்தில் ராமானுஜர் , பராசரரை அழைத்து,திருநாராயணபுரம் சென்று,அங்கு வேதாந்தி என்பவரை வாதத்தில் வென்று வருமாறு கூறினார்

பட்டரும் அப்படியே திருநாராயணபுரம் சென்று, வேதாந்தியை வாதத்திறமையால் வென்று அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார்
அவருக்கு நன் ஜீயர் எனப் பெயரிட்டார்.அவரை வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்க வைத்தார்

நான் என் வாதத் திறமையால் பட்டரை வென்றேனோ என்பதையே "வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே" (இல்லையே..அதனால் நான் இங்கிருந்தால் என்ன ஆல்லது இவ்வூரை விட்டு வெளியேறினால் என்ன) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Thursday, November 10, 2016

77 - நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே

நீரோருகம் என்றால் தாமரை மலராகும்

காசியில், சிங்கன் என்பவன் வசித்து வந்தான் .அவன் தீவிர ஸ்ரீநாரயணரின் பக்தன்.தினசரி கோயில் குளத்திலிருந்து தாமரை மலரைப் பறித்து வந்து எம்பெருமானை அலங்கரித்து வந்தான்

அவன் நல்ல நீச்சல் வீரன்.ஆகவே, அவனுக்கு அந்த அகந்தை இருந்தது.கங்கை ந்தியின் ஒரு கரையிலிருந்து அடுத்தக் கரைக்கு அநாசியமாக நீச்சல் அடிப்பான்.

ஒருசமயம், அவன் அவன் அப்படி நீச்சல் அடிக்கையில், நதியின் சுழலில் சிக்கிக் கொண்டான்.கங்கை அவனை அடித்துச் சென்றது.அவனது நீச்சல் திறமை எடுபடவில்லை.அவன் கொஞ்சம் கொஞ்சமாக முழுகத் தொடங்கினான்.

தனக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதை அறிந்து வைத்திருந்த அவன், கஜேந்திரனின் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து காத்த நாராயணனின் நினைவு வர.."எம்பெருமானே..நான் உனக்கு சரணாகதி" என ஸ்ரீநாராயணனிடம் சரணாகதி அடைந்தான்,

ஆந்த சமயம் காற்று பலமாக விச..நதியில் ஒரு பெரிய அலை எழுந்தது.அது , அவனை கரையில் சேர்த்தது.

இறைவனின் அருள்தான் தன்னைக் காத்தது என அறிந்த அவன் அகந்தையை விட்டொழித்தான்.பின், எம்பெருமானுக்கு பணிவிடையே தன் பணி என மலர்களால் இறைவனை தினமும் அலங்காரம் செய்து  வாழ்ந்து வந்தான்

அப்படிப்பட்ட காசிசிங்கனைப் போல தினமும் தாமரை மலரை எம்பெருமானுக்கு இட்டேனா..இல்லையே..ஆகவே..நான் இங்கிருந்தால் என்ன , வெளியேறினால் என்ன என திருக்கோளூர் பெண் கூறினாள் 

Wednesday, November 9, 2016

76 - நீரில் குதித்தேனோ கணப்புரத்தாளைப் போலே

ஒருசமயம், ஸ்ரீநம்பிள்ளை, ஒரு சிறிய படகில் காவிரி நதியைக் கடந்துக் கொண்டிருந்தார்.

இரவு நேரம்..இருள்..நதியில் வெள்ளம் வரும் அபாயம்..

பாதை வழியில், படகுக் காரன், படகில் இருப்பவர்களிடம், "படகின் பாரம் அதிகமாய் உள்ளது.யாரேனும் நீந்தத் தெரிந்தவர் படகில் இருந்து  நீரில் குதித்தால்..மற்றவர்களைக் காப்பாற்ற இயலும்" என்றான்

நீர் மட்டம் ஏறிக்கொண்டே இருந்தது.

அப்போது, கணப்புரத்தாள் என்ற பெண், படகுக் காரரிடம் "எங்கள் ஆச்சாரியார் நம்பிள்ளையைக் காப்பாற்றுங்கள்.நீங்கள் நூறு வயது வாழ்வீர்கள்' என வாழ்த்திவிட்டு, காவிரி ஆற்றில் குதித்து விட்டாள்

படகும் சற்று பாரம் குறைந்ததால், முழுகிவிடாது கரை சேர்ந்தது.

ஆனாலும், நம்பிள்ளைக்கு தமக்காக ஒரு பெண் தண்ணீரில் குதித்து விட்டாரே என்ற வருத்தம் ஏற்பட அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்

அப்போது, எங்கிருந்தோ கணப்புரத்தாள் குரல் கேட்டது"சுவாமி! நான் பத்திரமாக இருக்கிறேன்.சிறு தீவு ஒன்றிற்கு வந்து விட்டேன்.தாங்கள் கவலைப்பட வேண்டாம்"

நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார்.பின், படகுக்காரன் , படகை எடுத்துச் சென்று அவரை காப்பாற்றி அழைத்து வந்தான்.

வந்தவர், நம்பிள்ளையை நமஸ்கரித்து, "சுவாமி! தாங்கள்தான் சிறு தீவு உருவில் வந்து எனைக் காத்தீர்கள்" என்றாள்
"உனது நம்பிக்கை அதுவானால் அப்படியே இருக்கட்டும்" என்றார் நம்பிள்ளை

ஆச்சாரியாரின் உயிரைக் காப்பாற்ற நீரில் குதித்த கணப்புரத்தாளைப் போல நான் செய்தேனா..இல்லையே..ஆகவே..நான் இங்கிருந்தால் என்ன..வெளியேறினால் என்ன என்று கேட்டாள் திருக்கோளூர்ப் பெண் 

75- யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே

ராமானுஜரின் ஐந்து ஆச்சார்யர்களில் திருமலை நம்பியும் ஒருவர்.இவர் ராமானுஜரின் தாய் மாமன் ஆவார்

ராமானுஜர், திருமலைக்கு முதன் முறையாக வந்த போது, ராமானுஜரின் சீடர்கள் அவரை மலை மீது ஏறி..எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்ய வேண்டினர்.தவிர, ஆனந்தாழ்வாரின் நந்தவனத்தையும் பார்க்க வேண்டினர்

ஆனால், ராமானுஜரோ, அந்த மலை ஆதிஷேசன் என்றும்..அதில் தன் கால்கள் படலாமா" ? என்றும் யோசித்தார்.

ஆனால், சீடர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் மலை மீது ஏற ஒப்புக் கொண்டு ஏறினார்

அச்சமயம் திருமலை நம்பி, இறைவனின் பிரசாதங்களுடன் கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தார்.வழியில் ராமானுஜரைப் பார்த்தார்.

ராமானுஜர், "என்னப் போன்ற சிறியோன் ஒருவனுக்காக தாங்கள் ஏன் இறங்கி வர வேண்டும்? வேறு யாரேனும் சிறியர்களை அனுப்பியிருக்கலாமே!" என்றார்

அதற்கு நம்பி, "தேடிப் பார்த்ததில் என்னை விட சிறியோன் யாரும் தென்படவில்லை" என்றார்

ஒவ்வொரு வைஷ்ணவரும் வேறு ஒரு வைஷ்ணவரைக் கண்டால் அவரைவிட தாழ்ந்தவராக எண்ண வேண்டும்.ஆழ்வாரும் அப்படி எண்னிக் கொண்டவர் தான்

அந்த திருமலை நம்பி தன்னை சிறியோன் என்றுக் கூறிக் கொண்டது போல நான் கூறினேனா...இல்லையே...நான் ஏன் இங்கு இருக்க வேண்டும் என் கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

74 - என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!

உபரிசரன் தர்மத்தின் படி நாட்டை ஆள்பவன்.அதனால் தர்மதேவதை மகிழ்ந்து அவன் பாதங்கள் பூமியில் படாது வானத்தில் நடக்கும் வசுஆக அவனை ஆக்கியது

ஒருநாள் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் யாகத்தில் பலியிடும் விலங்குகள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது.

வேதத்தின்படி, எந்த ஒரு விலங்கினையும் கொல்லக் கூடாது.ஆனால், யாகம் நடைபெறுகையில் ஆடு போன்ற விலங்கினை தீயில் இடுவது வழக்கமானது.

அனால், விலங்குகளை கொல்லக்கூடாது என்பதால், ஆடு போன்ற உருவை தானியங்களில் உருவாக்கி அதை யாகத்தில் இட்டனர் ரிஷிகள்

இதற்கு தேவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த யாகத்தில் உயிரினமான் ஆட்டையே இட வேண்டும் என்றனர்

இருவர்களுக்குள் தகாராறு ஏற்ப்ட அவர்கள் உபரிசரனை அணுகி, தர்மத்தின் படி அவர் முடிவைச் சொல்லச் சொன்னார்கள்

உபரிசரனைப் பொறுத்தவரை அனைத்து உயிர்களும் தன்னைப் போல என எண்ணுபவன்.ஆகவே, அவன் ரிஷிகள் சொன்னதும், செய்வதுமே சரி என்றான்

இதனால் கோபமுற்ற தேவர்கள் அவனை பாதாள உலகம் செல்ல சபித்தனர்.

ஆனால்..அதனால் அவன் கலக்கமடையவில்லை.அது, அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை

அப்படிப்பட்ட உபரிசரன் போல பிற உயிர்களும் என்னைப் போல என்றேனா என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்


73- உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!

பிள்ளை திருநறையூர் அரையர் வைஷ்ணவ ஆசார்யார் ஆவார்

ஒருசமயம் அவர் தன் குடும்பத்துடன் தோட்டியம் என்ற ஊருக்கு வேதநாராயணன் பெருமாள் கோயிலுக்குச் சென்றார்

அப்போது சில சமூக விரோதிகள் கோயிலுக்கு தீ வைத்தனர்

தீ வேகமாகப் பரவ ஆரம்பித்தது.மக்கள் சிதறி ஓடினர்.

எம்பெருமானின் உருவத்தைத் தீ அணுகுவதைக் கண்டார் அரையர்

அதைப் பொறுக்கமுடியாமல் எம்பெருமானின் உருவச்சிலையைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.அதைப் பார்த்த அவர் மனைவி, குழ்ந்தைகளும் சேர்ந்து எம்பெருமானைக் கட்டிப்படித்தனர்.

தீயின் உக்கிரம் பொறுக்காத குழ்ந்தைகள் கதறினர்..அப்போது அரையர், "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.நாம் நேரே வைகுண்டம் சென்று விடலாம்" என்றார்

அப்படிப்பட்ட திருநறையூரார் போல தன் உடம்பை வெறுத்து எம்பெருமானை நான் காத்தேனா என் கிறாள் திருனறையூர்ப் பெண்.

70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!

திருக்கோட்டியூர் நம்பி. திருமலையாண்டான் என்பவரை அழைத்துக் கொண்டு ராமானுஜரை காண ஸ்ரீரங்கம் வந்தார்.திருமலையாண்டான் ஆளவந்தாரின் சீடர்

நம்பிகளை வரவேற்ற ராமானுஜர், திருமலையாண்டானையும் வணங்கினார்.நம்பிகள் ராமானுஜரிடம்,"இவர் என் குரு ஆளவந்தாரின் சீடன்.திருவாய்மொழியை ஆளவ்ந்தாரிடம் கற்றுத் தேர்ந்தவர்.நீங்கள் இவரிடம் திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்

ராமானுஜரும் ஒப்புக் கொண்டார்.திருமலையாண்டான், திருவாய்மொழியை, தான் ஆளவந்தாரிடம் கற்றவிதத்தில் அர்த்தத்துடன் கற்பித்தார்

ஆனால், ராமானுஜர் அவ்வப்போது குறுக்கிட்டு, இதற்கு இந்தப் பொருள் வராதே' எனக் கூறினார்.இது ஆண்டானுக்கு எரிச்ச்ல் மூட்டியது

உதாரணத்திற்கு, திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்

  "அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
    அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்:
    அறியாமைக் குறள் ஆய்,நிலம் மாவலி மூவடி என்று
   அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே"

என்ற பாசுரத்திற்கு பாடம் எடுத்தார்

இதற்கு ஆண்டான், "அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள்,பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாக புலம்புகிறார் ஆழ்வார்" எனப் பொருள் கூறினார்

ஆனால் ராமானுஜர், "அது சரியான விளக்கம் அல்ல.தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்து கொள்ளாதது தனது அறியாமையே" என்று விளக்கினார்

இதனால் கடுப்பான ஆண்டான், பாடம் எடுப்பதை நிறுத்தி விட்டார்

இதையெல்லாம் அறிந்த திருக்கோட்டியூர் நம்பி, ' எல்லாம் அறிந்த கிருஷ்ண பகவான் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கேட்டார்.அதுபோல எண்ணி ராமானுஜருக்கு கற்பிக்கவும் 'என ஆண்டானுக்கு அறிவுரை கூறினார்

திரும்ப பாடம் ஆரம்பமானது.ராமானுஜர் குறுக்கீடும் இருந்தது

ஆண்டான் யோசித்தார்,ராமானுஜர் சொல்லும் அர்த்தம் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார்.பின் கேட்டார்"நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை.அவர் பேசிக் கேட்டதும் இல்லை.அப்படியிருக்க இவ்வளவு சரியான ப்படி அவர் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்கள்"

அதற்கு ராமானுஜர் நான் ஒரு ஏகலைவன் என்றார்

அப்படி ராமானுஜர் குறுக்கீடுகள் இருந்தும், அவரைச் சுற்றியே இருந்த திருமாலையாண்டான் போல நான் சுற்றிக் கிடந்தேனோ? இல்லையே...என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்





Saturday, November 5, 2016

72- உயிராயபெற்றேனோ ஊமையைப்போலே

ராமானுஜரின் மடத்தில் வாய் பேச முடியாத ஒருவர் இருந்தார்.தன்னால் முடிந்த சேவைகளை ராமானுஜருக்கு அவர் ஆற்றி வந்தார்

ஒருநாள், ராமானுஜர் அவரை ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றார்

அறையின் கதவை தாளிட்டப் பின்னர்,  பாதுகைகளை அவரது தலையில் வைத்து ஆசிர்வதித்தார்.பின், அந்தப் பாதுகைகளை அவரிடமே கொடுத்துவிட்டார்

இந்நிகழ்வுகளை கூரத்தாழ்வார், ஒரு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்

"நானும் ஏதும் அறியாதவனாய் , வாய் பேச முடியாதவனாய் இருந்திருந்தால் எனக்கு ராமானுஜரின் ஆசி இதுபோல கிடைத்திருக்குமே" என எண்ணினார்

அந்த, வாய் பேச முடியாதவர்,  ராமானுஜரையே தன் உயிராய் எண்ணி  பணிபுரிந்தவாறே தன் வாழ்நாளைக் கழித்தார்

(அவரைப்போல )உயிராயப் பெற்றேனோ ஊமையைப் போலே . இல்லையே என் கிறாள் ராமானுஜரிடமே  திருக்கோளூர்ப் பெண்

71 -சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!

திருவாய்மொழி விளக்கம் ராமானுஜர் ஐந்து ஆசிரியர்களிடத்தில் அரிய பொருள் விளக்கங்களைக் கேட்டறிந்தவர். எனினும், தன்னுடைய இயல்பான நுண்ணறிவால் அவற்றைச் சிந்தித்துச் செயல்பட்டவர். எட்டெழுத்து மந்திரம் முதலானவற்றைத் திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டுத் தெளியுமாறு ராமானுஜருக்கு பெரிய நம்பிகள் அறிவுறுத்தினார். திருவரங்கத்திலிருந்த ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளைக் காண, பதினெட்டு முறை சென்றார்.

திருக்கோட்டியூர் நம்பிகள் உபதேசித்த திருவெட்டெழுத்து மந்திரத்தை அவ்வூர் கோபுரத்தின் மீது நின்று ஆர்வமுள்ளோர் அனைவருக்கும் உபதேசித்தார், ராமானுஜர். குருவின் கட்டளையை மீறி அவ்வாறு உபதேசித்ததால் அவருக்கு நரகம் கிட்டும் என்றார் திருக்கோட்டியூர் நம்பி. திருவெட்டெழுத்தின் பயனைப் பலர் எய்தும் பொருட்டுத் தான் ஒருவன் நரகம் செல்வது உகந்தது என்று கூறித் தன் ஆசானையும் பிரமிக்கச் செய்தார் ராமானுஜர். அத்துடன் திருக்கோட்டியூரார், ராமானுஜரை, திருமலையாண்டான் என்ற ஆசானிடம் நாலாயிரம் திவ்ய ப்ரபந்தங்களுக்கும் விளக்கம் கேட்டு அறியப் பணித்தார். 

அவ்வாறே ராமானுஜர் திருமலையாண்டானிடம் பாடம் கேட்டார். சில பாசுரங்களுக்கு, திருமலை ஆண்டான் கூறிய விளக்கங்களுக்கு மேலும் தெளிவான பொருள்கள் கூறி அவரை வியக்கச் செய்தார். ஏனெனில், ராமானுஜர் கூறிய சிறப்பு விளக்கங்கள் யாவும் ஆளவந்தார் கூறிய விளக்கங்கள் ஆகும். ஆளவந்தாரிடம் நேரில் பாடம் கேட்காத ராமானுஜர் அவர் கூறிய அதே சிறப்பு விளக்கங்களை விவரித்தது ஆண்டானுக்கு வியப்பாக இருந்தது! சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே -‘சூள்’ என்றால், சபதம் அல்லது ஆணை என்று பொருள். 

திருக்கோட்டியூர் நம்பி மறைபொருளை தகுதி அறிந்து உரைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ராமானுஜர் திருக்கோட்டியூராரிடம் மறைபொருளை எப்படியும் பெறுவது என்று சூளுரைத்து, பதினெட்டு முறை முயன்று பெற்றார். இருவரும் சூள் உரைத்து உறவு கொண்டனர். தான் அவ்வாறு உறுதியுடன் உபதேசிக்கவோ, உபதேசம் பெறவோ வாய்ப்புப் பெறவில்லையே என்று திருக்கோளூர்ப்பெண்பிள்ளை ஏங்குகிறார். - 

Friday, November 4, 2016

69- கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே

மாறனேரி  மகான் ஆளவந்தாரின் சீடராக விளங்கியவர்.பெரிய நம்பிக்கு நெருக்கமானவர்

இவர் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்.ஒருநாள் அவர் மண்ணைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த பெரிய நம்பி அதைப் பற்றிக் கேட்டார்."மண்ணால் ஆன உடலுக்கு மண்ணை இடுகிறேன்' என சொன்னவர், அத்துடன் நிலலது கண்ணனும் மண்ணை உண்டதைச் சொன்னார்

ஆளவந்தார் ராஜபிளவைக் கட்டியினால் அவதிப்பட்டார்.மாறனேறி நபிகள், அதனைத் தான் வாங்கிக் கொண்டு ஆளவந்தாரைக் குணமடையச் செய்தார்.தமது நோயை வாங்கிக் கொண்ட நம்பிக்கு, பெரிய நம்பி பணிவிடைகள் செய்தார்.இப்படி, அவர்கள் சாதி பேதமின்றிப் பழகினர்

மாறனேறி நம்பி மறைந்து விட வேதியரான பெரிய நம்பி, அவருக்கு இறுதிக் கடன் களைச் செய்தார்.அதை விரும்பாத மற்ற வேதியர்கள்பெரிய நம்பியை விலக்கி வைத்தனர்.இது கண்ட அவரது மகள் கோபமுற்று திருவரங்கப் பெருமானிடம் நியாயம் கேட்கச் சென்றாள்.அப்போது, தேரில் உலா வந்து கொண்டிருந்த திருவரங்கனை நோக்கி' "எனது தந்தை மாறனேரி நம்பிக்கு இருதிக்கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும்" என்றாள் அந்துழாய் (பெரிய நம்பியின் மகள்)

தேர் அப்படியே நின்றது.அப்போது ராமானுஜர் அங்கு வந்தார்.பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்டார்
பெரிய நம்பிகள்"பறவை யினத்தைச் சேர்ந்த ஜடாயூவிற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்ததையும்,விதுரருக்கு தர்மபுத்திரர் இறுதிக் கடன் செய்ததையும் கூறி மாறனேரி நம்பி இவர்களைவிட தாழ்ந்தவரா" என்றார்

ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அதனால்தான் மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்ததாகப் பெரிய நம்பி சான்றுகள் காட்டிப் பேசினார். மேற்கண்ட சான்றுகளை எடுத்துக்காட்டிப் பேசிய பெரிய நம்பிகள் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஒரு கருத்தைத் தெரிவித்தார். 
‘‘ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார். அதாவது, கடலோசை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது! அதனை எவர் பொருட்படுத்துகின்றனர்? முற்போக்குச் சிந்தனைகளையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது தோன்றும் மகான்கள் சான்றோர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றனர். 

அவை வீணில் ஒலிக்கும் கடலோசையைப் போன்று அலட்சியம் செய்யப்படுகின்றனவே? என்று பெரிய நம்பி எடுத்துப் பேசினார்

. இதையே திருக்கோளூர்ப் பெண்பிள்ளை கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே?  என்றாள்

68 - கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே


"கள்வன்: என்பது ஸ்ரீமன்நாராயணனுக்கு இருக்கும் பல பெயர்களில் ஒன்றாகும்.கள்வன்..எனில்..திருடுவது, ஏமாற்றுவது என்று பொருள்.எம்பெருமானின் பக்தர்களின் நலனுக்காக இதையும் செய்வார்.அவரது திவ்யதேசங்களில் ஒன்றில் கள்வன் என்ற பெயரிலேயே காணப்படுகிறார்

மகாபலி யாகசாலையில் வாமனனாக சிறு உருவில் தோன்றி, மூன்று அடி நிலம் கேட்டு, திருவிக்ரமனாக மாறி..உலகை அளக்கிறார் எம்பெருமான்.அந்நேரம் அசுரர்களின் லோககுரு நாராயணனை கள்வன் என் கிறார்

நம்மாழ்வாரையும் லோககுரு எனலாம்.பல பாசுரங்களில் பெருமானை அவர் கள்வன் என் கிறார்.திருவாய்மொழியில், "கொள்வான் அவன் மாவலி மூவடி தா என்ற கள்வனே" என் கிறார் (வாமன அவதாரத்தை)

தவிர்த்து, சிவபெருமான் ஒரு சமயம் நாராயணனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார்.அதை கிருஷ்ண அவதாரத்தில், கைலாயம் சென்று கண்ணன் கேட்கிறான்.அனைத்து உலகிற்கும் எம்பெருமானே தந்தை..அவர் சிவனிடம் வரம் கேட்பதைக் கண்ட சிவபெருமான் "கள்வனே" என் கிறார்


(தவிர்த்து திருவாய்மொழியில் ஒரு பாடல்-

கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் 
உள்ளே தோற்றிய இறைவ!’ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே.
பொழிப்புரை
வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும்  நின்னிடத்தினின்றும் தோன்றச்செய்த இறைவனே!’ என்று, கருடவாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்)

திருமங்கையாழ்வாரும் எம்பெருமானை "கார்வனத்து உள்ளே கள்வா" என் கிறார்

இப்படியெல்லாம் லோககுருக்கள்  எம்பெருமானை "கள்வன்" என்று அழைத்தாற்போல நான் அழைக்கவில்லையே..இவ்வூரில் இருக்க என்ன தகுதி என்றாள் திருக்கோளூர்ப் பெண்

67-அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே

சீதையை திருப்பி அனுப்பி விடும்படியும், ராமனுடன் சமாதானமாய் சென்றுவிடும் படியும் பல அறிஞர்கள் ராவணனுக்கு அறிவுரை வழங்கினார்கள்

ஆனால் ராவணன் செவி சாய்க்கவில்லை.

மாரீசன்,சீதா பிராட்டி,விபீஷணன், கும்பகர்ணன்.மால்யவான் போன்றோரும்..அறிவுரை வழங்கினர்

இவர்களுள் மால்யவான் என்பவர் ராவணனின் தாய்வழிப் பாட்டன்

வயதானவர்,அறிவாளி,அனுபவம் நிறைந்தவர் அவர் ராவணனிடம் சொல்கிறார்

"ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப் போகாதே!
மனிதர்களும், குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர்.அவர்கள் உனக்கு எதிரிகள்.மேலும், ராமன் ,ஒரு மனிதனாய்த் தெரியவில்லை.அவன் விஷ்ணுவின் அவதாரம்.நம் படை முழுதும் போரில் அழியும்.ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சமாதானமாய்ப் போய்விடு "

மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை

அந்த மால்யவானைப் போல அனுகூலம் சொன்னேனோ (எம்பெருமான் பற்றி) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்



66-.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!

நம்பி என்ற செல்வந்தர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தொண்டில் ஈடுபட்டு வந்தார்.ஆனால், அவரது தொண்டுகள் பயனுள்ளதாக அமையவில்லை

நம்பியைத் திருத்த ராமானுஜர் செய்த அறிவுரைகள் அனைத்தையும் அவர் அலட்சியப்படுத்தினார்.அதனால் மனம் உடைந்த ராமானுஜர் காஞ்சி க்குத் திரும்பச் செல்ல நினைத்தார்.கூரத்தாழ்வார் அவரை சமாதானம் செய்து, நம்பியை நல்வழிப்படுத்தி, ராமானுஜரின் சீடனாக ஆக்கினார்

ராமானுஜர் அவருக்கு "திருவரங்கத்து அமுதனார்" என்ற பெயரைச் சூட்டினார்

அவருக்கு ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.அதை ராமானுஜரிடம் சொன்னார்.கூரத்தாழ்வாரையோ அல்லது பன்னிரு ஆழ்வார்களையோக் குறித்து நூல் எழுதலாம்" என்றார் ராமானுஜர்

ஆனால், அமுதனாரோ. "ராமானுஜர் நூற்றந்தாதி;' என்ற நூலை எழுதினார்.ஒவ்வொரு பாடலும் ராமானுஜரின் பெயரை  வைத்து நூறு பாடல்கள் கொண்ட அந்தாதி அது

அந்நூல் ராமானுஜர் முன் அரங்கேறியது.அறிஞர்கள் அனைவராலும் பாராட்டப் பட்டது

இதையே திருக்கோளூர்ப் பெண்'அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே" (இல்லையே) என் கிறாள் 

65- ஆரியனைப் பிரிந்தோனோ தெய்வவாரியாண்டானைப் போலே

ஆளவந்தார், திருவனந்தபுரம் புறப்பட்டு செல்வதற்கு முன்னால்தம் மடத்தின் பொறுப்பைதெய்வவாரியாண்டான் என்ற சீடரிடம் விட்டுச் சென்றார்.இந்த சீடர் குருபக்தி அதிகம் கொண்டவர் ஆவார்

ஆளவந்தாரின் பிரிவு அவரை வாட்டியது.அதனால் உடல் நலம் குன்றி படுக்கையில் வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற உடன் இருந்தவர்கள் , ஆசானின் பிரிவே இதற்குக் காரணம் என அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்

அவரை பல்லக்கில் ஏற்றினர்.ஆசானைக் காணப்போகிறோம் என்ற எண்ணமே..அவருக்கு உடல் தேறத் தொடங்கியது

திருவனந்தபுரத்தில் எம்பெருமானை தரிசித்துவிட்டு ஆளவந்தார் திரும்பி வந்த போது பல்லக்கைக்  கண்டார்.மடத்தை பொறுப்பாக கவனிக்காமல் அவர் வந்ததைக் கண்டு"வாரியாண்டாரே! பரதன், ராமபெருமான் கட்டளைக் கிணங்க நந்திக்கிராமத்தைவிட்டு அகலாமல் இருந்தார்.ஆனால் நீயோ என் கட்டளக்கு கீழ் படியாது வந்துவிட்டாய்" என்று கடிந்து கொண்டார்.
அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாத வாரியாண்டார் மயங்கி விழுந்தார்

தன் பிரிவுதான் வாரியாண்டானின் நிலைக்குக் காரணம் என மற்றவர்கள் மூலம் அறிந்த, ஆளவந்தார் அவரை எழுப்பி..ஆறுதல் கூறினார்.

ஆளவந்தார், வாரியாண்டானை எம்பெருமானை தரிசித்துவிட்டு வரச் சொன்னார்.ஆனால் அவரோ "ஆரியப் பெருமானே எனக்கு  அரங்கனும் நீங்களே..அனந்தபத்மனாபனும் நீங்களே! உங்களைப் பிரிய இயலாது" என்றார்.

பின் குருநாதருடன்  ஸ்ரீரங்கம் திரும்பினார்.

"ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே" என இதையே திருக்கோளூர்ப் பெண் கூறினாள்

(இங்கு ஆரியன் என்பது உயர்ந்தவர் என்ற பொருளில் ஆளவந்தாரைக் கூறியது)

Thursday, November 3, 2016

64- அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப்போலே


அரையர் சேவை என்ற நாட்டிய நிகழ்ச்சியில் நடனக் கலைஞர்கள் ஆழ்வார் பாசுரங்களுக்கு இசையமைத்து, அபினயம் பிடித்துக் காட்டுவர்.ஆளவந்தார் எனும் வைஷ்ணவத் துறவி  இந்நிகழ்ச்சிகளைக் கண்டு பெருமாளின் பெருமைகளில் மூழ்கித் திளைப்பார்

தமக்குப் பிறகு வைஷ்ணவத்தைக் காக்க ராமானுஜரே சரியானவர் எனத் தேர்ந்தெடுத்த்வர் இவரே ஆவார்

ஒருநாள் நடந்த அரையர் சேவையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் ஆளவந்தார்

திருவாய்மொழியில் வரும் "ஆனந்தபுரம் புகுதும் இன்றே' என்ற பகுதியை இவரைப் பார்த்து மூன்று முறை பாடி நடித்தனர்

அதைக் கேட்ட ஆளவந்தார், அரங்கன், தன்னையே யே அரையர் வாய்மொழி மூலம் அனந்தபுரம் செல்ல அறிவுறுத்துவதாக உணர்ந்தார்.

உடனே அனந்தபுரம், என்ற திருவனந்தபுரத்திற்கு சென்று பத்மனாப சுவாமியை தரிசித்து, பெருமான் சேவையில் ஈடுபட்டார்

இந்நிகழ்ச்சியையே "அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே" என்றாள் திருக்கோளூர்ப் பெண்

63- அருளாழங்கண்டேனோ நல்லானைப் போலே


எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் பரம பக்தன் அந்தணன் ஒருவன்..காவிரி ஓடும் ஒரு ஊரின் நதிக்கரையில் வசித்து வந்தான்

ஒருநாள்,அவன் காவிரியில் நீராடிக் கொண்டிருந்த போது சடலம் ஒன்று நதியில் மிதந்து வருவதைப் பார்த்தான்

அந்த சடலத்தின் தோள்பட்டையில் சங்கு, சக்கரம் ஆகியவை இருந்ததால், அது ஒரு வைஷ்ணவனின் சடலம் என, அதை எடுத்து..இறுதிச் சடங்குகளை அவனே செய்தான்

அந்த ஊர் மக்களுக்கு அது பிடிக்கவில்லை,அந்த சடலம் ஒரு தாழ்ந்த சாதி ஒருவனுடையது என்றும், அதற்கு இறுதிச் சடங்கை அந்தணனான அவன் செய்ததால், அவனை சாதியைவிட்டு ஒதுக்கி வைத்தனர்

அந்த அந்தணன், எம்பெருமானிடம், அவ்வூர் மக்களைத் திருத்தும் படி வேண்டினான்.

அடுத்த நாள் ஊர் மக்கள் கூடியிருந்த கோயிலில், எம்பெருமான் மக்களுக்கு., அந்த சடலம் ஒரு வைஷ்ணவருடையது அல்ல என்றும், ஆனாலும்..அவனுக்கு   இறுதிச் சடங்குகளைச் செய்த அந்தணன் ஒரு நல்லான் (நல்லவன்) என்றும்..அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு புரிய வைத்தார்

எம்பெருமானின் சக்கரம் அருளாழி எனப்படும்.நல்லான், அந்த சடலத்தின் அருளாழியையேப் பார்த்தான்.இதன் மூலம் அவனுக்கு எம்பெருமான் ,மீதான அருளின்  ஆழமும் தெரிந்தது.தவிர்த்து அன்பு என்பது எதிர்ப்பார்ப்புடன் வருவது.அருள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது/நல்லான் அருளாழ்வம் கொண்டவன்

அந்த நல்லானைப் போல நான் அருளாழங்கண்டேனோ என் கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Sunday, October 30, 2016

62- அத்வைதம் வென்றேனோ எம்பெருமானைப் போலே

அத்வைதம் என்பது இரண்டற்ற நிலை

ஜீவனும், இறைவனும் (ஜீவாத்மா, பரமாத்மா) ஒன்று தான்..வேறு அல்ல..சகுல உயிர்களுக்கும் பொதுவாக ஆத்மா விளங்குகிறது

நான் தான் பிரம்மம் என்ற அத்வைத  தத்துவம் ராமானுஜருக்கு திகைப்பூட்டியது

நானே பிரம்மம் என்று இருந்து விட்டால் கடவுள் வணக்கத்திற்கு வகை ஏது...பக்திக்கு இடம் ஏது.தன்னைவிட மேலான பரம்பொருள் என ஜீவன் உணர்ந்தால்தான் அந்த பரம் பொருளை வணங்க வேண்டும்..முக்தியடைய வேண்டும் என்ற எண்ணம் ஜீவனுக்கு ஏற்படும்.

பிரம்மம் தான் எல்லாம்..அதனால் ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்ர தன் கொள்கையை பரப்பி வந்தார்

அப்போது வடநாட்டில் யக்ஞமூர்த்தி என்ற பெரும்புலவர் இருந்தார். அவர் அத்வைத நெறியை வலியுறுத்தி வந்தார். ராமானுஜருடன் வாதாட யக்ஞமூர்த்தி திருவரங்கத்திற்கு வந்தார். யக்ஞமூர்த்தி நிரம்பக் கற்ற துறவி. வாதத்திறமை மிக்கவர்.

வாதப்போரின் நிபந்தனைப்படி, யக்ஞமூர்த்தி, தான் தோல்வி அடைந்தால் தன் பெயரை மாற்றி, ராமானுஜரின் பெயரை வைத்துக் கொள்வதாகக் கூறினார். அத்துடன், ‘‘நான் ராமானுஜரின் பாதுகைகளைச் சுமப்பேன்’’ என்றும் கூறினார். ராமானுஜர், ‘‘நான் தோற்றால் எனது நூல்களைக் கையால் தொடமாட்டேன்’’ என்றார். வாதம் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பதினேழாம் நாள் நிலவரப்படி யக்ஞமூர்த்தியின் பக்கம் ஓங்கி நின்றது.

  அன்றிரவு ராமானுஜர் திருவமுது செய்யாமல் இருந்தார். ஆழ்வார்கள் வளர்த்த திருமால் நெறி தன்னால் தோல்வி அடையாமல் காத்திடப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாளும் ராமானுஜரின் கனவில் தோன்றினார். உமக்கு, ‘‘இன்னுமொரு சீடனைத் தந்தருள்வோம்!’’ என்று குறிப்பாகக் கூறியருளினார். பதினேழாம் நாளிலேயே யக்ஞமூர்த்தி தன்னுடைய வாதத்தை நிறைவு செய்து விட்டார். பதினெட்டாம் நாள், ராமானுஜர் பல்வேறு சான்றுகளுடன் வாதாடினார். இறுதியில் வெற்றி வாகையும் சூடினார்.


அந்த எம்பெருமானைப் போல வாதாடி அத்வைதம் வென்றவளா நான்? என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Friday, October 28, 2016

61- அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே

சோழ மன்னன் தொல்லைகளை பொறுக்க முடியாமல் ராமானுஜர் கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்திற்கு சென்று விடுகிறார்.

பெரிய நம்பிகள் இறந்தது, கூரத்தாழ்வார் பார்வை இழந்தது எல்லாம் முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்

பெரிய நம்பிகளின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் கூரத்தாழ்வார்

ராமானுஜரும் அங்கு இல்லாததால் அவர் மனம் மிகவும் வேதனைப்பட்டது.ஆறுதல் வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்

ராமானுஜருக்கு நெருக்கமானவர்கள் யார் வந்தாலும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சோழ மன்னன் கட்டளை இட்டிருந்தான்

ஆகவே கோயில் வாயில் காப்பான் ஒருவன் அவரை உள்ளே விட மறுத்து விட்டான்

ஆனால் வேறொரு காப்பாளனோ, "ராமானுஜருக்கு இவர் வேண்டியவராய் இருந்தாலும், இவர் நல்லவர்.இவரை உள்ளே அனுமதிக்கலாம்' என்றபடியே அவரை கோயிலுக்குள் செல்ல அனுமதித்தான்

ஆனால் கூரத்தாழ்வார் சொன்னார்,"ராமானுஜருடன் பழக்கம் உள்லவன் என்பதால் கோயிலுக்குள் அனுமதிக்கிறேன் என்றால்..உள்ளே செல்கிறேன்.அதைவிட்டு..வேறு எந்த காரனத்தாலும் உள்ளே செல்ல அனுமதிக் கொடுத்தால்..அப்படியாயினும் உள்ளே சென்று எம்பெருமானை த்ரிசிக்க வேண்டாம்"

என்று சொல்லி விட்டு கூரத்தாழ்வார் வெளியேறினார்

அதுபோல நான் ஆசார்யாருக்கு வேண்டியவள் என்று கூறிவிட்டு அவன் வேண்டாம் என்றேனா..இல்லையே..அதனால் திருக்கோளூற் விட்டுச் செல்கிறேன் அன்றாள் அப்பெண்

60- அவன் போனானென்றேனோ மாருதியாண்டான் போலே

சோழ மன்னனின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் ராமானுஜர், ஸ்ரீரங்கத்திலிருந்து, கர்நாடகாவில் இருந்த திருநாராயணபுரத்திற்கு வந்து தங்கியிருந்தார்.ஆனால் அவரால், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், கூரத்தாழ்வாரையும், பெரியநம்பிகளையும் மறக்க இயலவில்லை

ராமானுஜருக்கு மாருதியாண்டான் என்றொரு சிஷ்யன் இருந்தான்.அவன், அவ்வப்போது ஸ்ரீரங்கம் சென்று அங்கு கூரத்தாழ்வாரையும், பெரிய நம்பிகளையும் பார்த்து செய்திகளை அறிந்து வந்து ராமானுஜரிடம் கூறுவான்.அதுபோல ராமனுஜர் சொல்வதை அவர்கலீடம் சென்று உரைப்பான்

இதற்கிடையே, சோழ மன்னனுக்கு கழுத்தில் ஒரு பெரிய கட்டி வந்துஇறந்தான். மக்கள் அதனால் அவனை கிருமி பாண்டியன் என்பர்

அந்தச் செய்தியை அறிந்தான் மாருதியாண்டான்.அதேபோன்று, பெரிய நம்பிகள் இறந்த செய்தி, ஆழ்வார் கண்பார்வை இழந்தது எல்லாம் கேள்விப் பட்டு அச் செய்திகளை ராமானுஜருக்குத் தெரிவிக்க திருநாராயணபுரம் வந்தான்

ராமானுஜரைக் கண்டதும் "அவன் போனான்" (சோழமன்னன் இறந்தான்) என்பதைக் கூறினான்.ராமானுஜர் மகிழ்ந்தார்.

பின்னர், பெரிய நம்பிகள், கூரத்தாழ்வார் பற்றிக் கேள்விப்பட்டு மனம் வருந்தினார்

பின்னர், ஸ்ரீரங்கம் வந்தார்

மாருதியாண்டான் போல, "அவன் போனானேன்றேனொ" .இல்லாத நான் திருக்கோளூரை விட்டுப் போனால் என்ன என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே- 59

நாதமுனியின் பெயர் ரங்கநாதமிஷ்ரர் ஆகும்

யோகவித்தை,தேவகான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் இவர்.ஆகவே, இவரை திருவரங்கநாத முனிவர் என்று அழைத்தனர்.அதுவே நாதமுனியாயிற்று.

இவர் கிபி 824 ஆம் ஆண்டு வீரநாராயணபுரத்தில் பிறந்தவர் (இப்போதைய காட்டுமன்னார்கோயில்)

இவர் நம்மாழ்வாரை வரவழைத்து பாசுரங்களைப் பெற்றார் .இவர் இல்லையெனில் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்கள் காணாமல் போயிருக்கும்

இவர் ஸ்ரீராமன் மேல் அளவு கடந்த பக்தியைக் கொண்டவர்.எல்லாவற்றிலும் இறைவனைக் காணுபவர்

ஒருநாள், அவர் யோக நிஷ்டையில் இருந்த போது, சோழ மன்னன் இவரைக் காண வந்தான்.ஆனால், பார்க்க முடியாமல் திரும்பினான்.பின், அதை அறிந்த நாதமுனியார் , சோழனின் தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரம் வரை மன்னனைக் காண நடந்தே  சென்றார்.இவரது இச்செயலைப் பற்றி சிஷ்யர்கள் கேட்ட போது ..தான் மன்னனை, கிருஷ்ணனாகவே எண்ணுவதாகக் கூறினார்

மற்றொரு முறை இவர் தியானத்தில் இருந்தார்.அப்போது இரு மனிதர்கள் (மிருகங்களைப் பழக்குபவர்கள்), ஒரு பெண்,குரங்குடன் வந்தனர்.இவரைப் பார்க்க முடியாமல் திரும்பினர்.விஷயம் அறிந்த இவர், ஸ்ரீராமன், லட்சுமணன், சீதா பிராட்டி, அனுமன் ஆகியோரே அவர்கள் என அவர்களைத் தேடி கங்கை கொண்ட சோழபுரம் நோக்கி நடந்தே சென்றார்

அவர்களைக் காண முடியாது வருந்தினார்..அந்த இடத்திலேயே உயிரிழ்ந்தார்,

அது போல எம்பெருமானைக் காண  நெடுந்தூரம் போனேனோ  நாதமுனியைப் போலே என்றாள் திருக்கோளூர்ப் பெண்

Thursday, October 27, 2016

நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர் நம்பியைப்போலே - 58

இடையற்றூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் இடையற்றூர் நம்பி.

இவர் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கு தவறாமல் முதல்நாளே சென்று, கடைசி நாள் உற்சவம் முடியும் நாள்வரை அங்கேயே இருப்பார்.

பின்னர், திரும்பி வந்தும் அது பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.

அவருக்கு நூறு வயது ஆனாது.உடல் தளர்ந்தது.அதனால் அம்முறை பிரம்மோற்சவத்திற்கு முதல்நாளே அவரால் செல்ல இயலவில்லை.ஆ றாவது நாள்தான் அவர் அங்கு சென்றடைந்தார்.ஒரு தூணில் சாய்ந்து நின்று கொண்டு நம்பெருமானை தரிசித்தார்

நம்பெருமாளும் ,பவனி வரும்போது  அவரைப் பார்த்து"முதல்நாளே வரும் நீ ஏன் இம்முறை ஆறாம் நாள் வந்தாய்?"என வினவினார்

அதற்கு இடையற்றூர் நம்பி, தன் உடல்நிலையேக் காரணம் என்றார்.

அதைக்கேட்ட நம்பெருமாள்.."சரி...இனிமேல் நீ இங்கேயே நில் (இரு)" என்ற நம்பெருமாள் அடுத்தத் தெருவிற்கு பவனி செல்கையில், இடையற்றூர் நம்பி நின்ற இடத்திலேயே உயிரிழ்ந்தார்.

என்னை அதுபோல எம்பெருமான் நில் என்று சொல்லப் பெற்றேனா இடையற்றூர் நம்பியைப் போலே..என்கிறாள் திருக்கோளூற்ப் பெண்  

Wednesday, October 26, 2016

இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே - 57

திருநாராயணபுரம் உற்சவர் செல்வநாராயணனின் சிலை, ஒரு சமயம் டில்லி பாதுஷாவிடம் இருந்தது.பாதுஷாவின் மகளுக்கு நாராயணன் மீது அளவுகடந்த பக்தி

ராமானுஜர் உற்சவரை மீட்க பாதுஷாவின் அரண்மனைக்குப் போனார்.அவர் சென்ற சமயம் இளவரசி அரண்மனையில் இல்லை.பாதுஷாவின் அனுமதியுடன் இளவரசியின் அந்தப்புரத்திற்குச் சென்று அங்கு செல்வநாராயணனின் விக்கிரகத்தைக் கண்டார்.

அவர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது.இதோ..என் செல்வப்பிள்ளை என உரக்கக் கத்தினார்

அந்தச் சிலை உடனே சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது.தன் சின்னஞ்சிறு   பாதங்களில் சலங்கை ஒலி ஒலிக்க...ராமானுஜரின் மடியில் ஏறி அமர்ந்து தன் இரு பிஞ்சுக் கரங்களால்..அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டது

அதுபோல இரு (கைகளால்)மிடறு (கழுத்து) பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப்போலே என ராமானுஜரிடமே திருக்கோளூர்ப் பெண் சொல்லிவிட்டு..இல்லையே ஆகவே இங்கு தங்க தனக்கு என்ன் தகுதி இருக்கிறது என்றாள்

(ராமானுஜரின் மடியில் இருந்த குழந்தை  பின் விக்கிரகமானது.அதை அவர் திருநாராயணர் கோவிலுக்கு எடுத்து வந்தார்.பாதுஷாவின் மகள் பின்னர் பெருமாளைத் தேடி வந்துநாராயணபுரத்தில் செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள்.மூலவரின் பாதத்தில் வரநந்தினி என்ற  பெயரில் இருப்பதாக ஐதீகம்.வரநந்தினியை பீபீ நாச்ச்சியார் என்பர் உள்ளூர் மக்கள்,இக்கோயிலில் ராமானுஜரும் உபதேச முத்திரையுடன் காட்சியளிக்கிறார்)  

இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே - 56

வடுகநம்பி ஸ்ரீராமாநுஜரின் முதன்மைச் சீடர்களில் ஒருவர்.ராமானுஜருக்கு தொண்டு செய்வதையே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார்.ராமானுஜர் இவரது பாதங்களில் தனது கால்களை நீட்டியபடி தனது இறுதி மூச்சை விட்ட பெருமை வடுகனம்பிக்கு உண்டு

ஸ்ரீரங்கநாதருக்கு ரங்கநாதன் என்று பெயர்.உற்சவருக்கு நம்பெருமாள் என்று பெயர்.ஒருமுறை ராமானுஜர் நம்பெருமானின் கண்ணழகில் மயங்கி, "வடுகா..நம்பெருமானின் கண்களைப் பார்," என்றார்.

ராமானுஜரைத் தவிர வேறு எவரையும் ரசித்தறியா வடுகநம்பி,அவரைப் பார்த்தபடியே, "என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று சொல்லி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்


இப்படிப்பட்ட வடுகநம்பி ஒருமுறை பாய் காய்ச்சிக் கொண்டிருந்தார்.அப்போது நம்பெருமாள் திருவீதி புறப்பாடு சென்று கொண்டிருந்தது.

ராமானுஜர், "வடுகா..நம்பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும்.விரைந்து வா" என்றார்

அங்கு வந்து உம்பெருமாளைப் பார்த்துக் கொண்டிருந்தால்,இங்கு நம்பெருமாளுக்கு யார் பால் காய்ச்சுவார்கள்" என்று கேட்டார்.வடுகநம்பி.

அவரைப் பொறுத்தவரை ராமாநுஜரே நம்பெருமாள்

அந்த வடுகநம்பியைப் போல ஆசார்ய பக்தியில், பெருமாளையும் மறந்து, "இங்கு பால் பொங்கும் என்றேனா"(இல்லையே!).பின் நான் இங்கு ஏன் இருக்க வேண்டும் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே - 55


சூதாட்டத்தில் தருமர் மயங்கி, வீடு, வாசல்,நாடு,நகரம் அனைத்தையும் பணயம் வைத்து இழக்கிறார்.கடைசியில், சகோதரர்களையும், தன்னையும், திரௌபதியையும் தோற்றார்

கௌரவர் சபைக்கு பாஞ்சாலி, துச்சாதனனால் அழைத்து வரப்படுகிறாள்.அவளைத் துகிலுரிகையில்... தன்னைக் காக்க கண்ணன் ஒருவனால்தான் முடியும் என அவனை சரணாகதி அடைகிறாள்

ஆரம்பத்தில், தனது இருகைகளால் மானம் போகாது மறைத்து கண்ணனைக் கூப்பிடுகிறாள்.கண்ணன் வரவில்லை

பின், ஒரு கையால் மானத்தை மறைத்து, மறுகையால் கண்ணனை வணங்கி அலறுகிறாள்.கண்ணன் வரவில்லை

இறுதியாக, தன் இருகைகளையும் மேலே தூக்கி, முற்றிலும் அவனே கதி என "கோவிந்தா: " என அலறுகிறாள்.கண்ணன் வந்து ரட்சிக்கிறான்

எம்பெருமானை, சரணாகதி என வந்துவிட்டால், நம்மை அவன் காப்பாற்றுவான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்

நான் அந்த திரௌபதியைப் போல முற்றிலும் சரணம் என இருகையும் விட்டேனா...ஆகவே எனக்கு இந்த ஊரில் இருக்க என்ன தகுதி உள்ளது..ஆகவே..நான் போகிறேன் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே - 54

அனுமனை தென் திசைக்குச் சென்று சீதை இருக்குமிடத்தைத் தெரிந்துவரும்படி ராமன் உரைத்தான்.அடையாளமாகக் காட்ட கணையாழியைக் கொடுத்தான்.தானும், சீதையும் அறிந்த சில ரகசிய  நிகழ்வுகளையும் கூறியனுப்பினார்

கடலைக் கடந்த அனுமன், ஊரெல்லாம் சீதையைத் தேடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டான்.கணையாழியை அளித்து விவரங்களைக் கூறினான்

அங்கு, அரக்கர்கள் அனுமனின் வாலுக்கு தீயை வைத்தனர்.அத்தீயைக் கொண்டே இலங்கையை எரித்தான் அனுமன்.

பின்னர் ராமன் இருக்குமிடத்திற்கு வந்து,அனுமன் வரவிற்காகக் காத்திருந்த ராமனிடம் "கண்டேன் சீதையை" என்றான்

சிறிய திருவடி என போற்றப்படுபவன் அனுமன்.

கண்டுவந்தேன் (சீதையை) என்றேனோ திருவடியைப் போலே..என்று இந்நிகழ்ச்சி பற்றி திருக்கோளூர்ப் பெண் கூறுகிறாள்

Tuesday, October 25, 2016

காட்டுக்குப் போனேனோ பெருமானைப் போலே - 53

ராமனுக்குப் பட்டாபிஷேகம்

மன்னன் தசரதன் அறிவித்து விட்டான்

சொல்ல வந்த மந்தரைக்கு பொன்மாலையை பரிசளித்தாள் கைகேயி..

"இது மகிழும் தரணமா? அவன் அரசனானால் உன் மகன் பரதன் என்னாவான்.ஆகவே ராமனை காட்டுக்கு அனுப்பு.உன் மகனை அரசனாக்கு: மந்தரை போதித்தாள்.மனம் மாறினாள் கைகேயி

மன்னன் தசரதன் முன்னர் ஒருசமயம் தன் உயிரைக் காத்த கைகேயிக்கு இரு வரங்களை அளித்திருந்தார்.அதை உபயோகித்துக் கொள்ள தீர்மானித்தாள்

"ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும்.பரதன் அரசாள வேண்டும்" மன்னனிடம் கேட்டாள்.பிடிவாதமாக இருந்தாள்.கொடுத்த வாக்கைக் காக்க மனனுக்கும் வேறு வழியில்லை.

ராமன் , லட்சுமணன், பிராட்டியுடன் வனத்திற்குக் கிளம்புகிறான்.தந்தையிடம் விடை பெறச் செல்கிறான்.

"ராமா! நான் கொடுத்த வரத்திற்கு கட்டுப் பட்டுவிட்டேன்.நீ என்னை மதியாமல் அயோத்தியைக் கைப் பற்றியிருக்கலாமே" என் கிறான் மன்னன்

"தந்தையே! நான் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்படவில்லை.உங்கள் வாக்கைக் காப்பாற்றுவேன்.பதினான்குஆண்டுகள் வனவாசம் புரிந்து திரும்புவேன்' என்றான்

தன் தந்தையின் வாக்கைக் காக்கக் காட்டிற்கு சென்றேனோ பெருமானைப் போல நான் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

Monday, October 24, 2016

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே - 52

கண்ணன் மீது அன்பு மிக்கவன் ததிபாண்டன்.ஆயர்பாடியில் தயிர் விற்பவன்.கண்ணன் அவ்வப்போது இவனிடம் குறும்புகள் செய்வது வழக்கம்

கன்றுகள், தாய்ப்பசுவிடமிருந்து அதிகம் பாலைக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என அதன் வாயைக் கட்டி வைத்திருப்பார்கள்.அதற்கு ததிபாண்டன் காவல்.கண்ணன் அவ்வப்போது அவனுக்குத் தின்பண்டங்களைக் கொடுத்து அவனை வெளியே அனுப்பிவிட்டு பாலைக் குடித்து விடுவான்

அதனால், ஒருநாள் கண்ணனை இதற்கெல்லாம் சேர்த்து பழி வாங்க வேண்டும் என ததிபாண்டன் காத்திருந்தான்

ஒருமுறை, கோபியர்கள் கண்ணனைப் பற்றி யசோதையிடம் புகார் அளிக்க, யசோதை கண்ணனை அடிக்க கையில் ஒரு குச்சியுடன் வந்தாள்.அதைக் கண்ட கண்ணன் அவளது கையில் சிக்கிவிடாமல் ஓடினான்

ததிபாண்டன் இல்லத்தில் பெரிய பெரிய தாழிகளில்தயிர் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும்.அப்படிப்பட்ட காலியான ஒரு தாழியைத் திறந்து அதனுள் அமர்ந்து விட்டான்.இதைப் பார்த்துவிட்ட ததிபாண்டன் அந்தத் தாழியை மூடி அதன் மீது அமர்ந்து கொண்டான்

அங்கு கையில் குச்சியுடன் வந்த யசோதை , அவனைப் பார்த்து, "கண்ணன் இங்கு வந்தானா" என்றாள்

"இல்லையே!" என்றான் ததிபாண்டன்.யசோதை அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.கண்ணன் தாழியைத் திறக்கச் சொல்லியும் ததிபாண்டன் கேட்கவில்லை

:உன்னை வெளியே விட வேண்டுமானால் ஒரு நிபந்தனை" என்றான்

என்ன

"எனக்கு மோட்சம் வேண்டும்.கண்ணா, நீ யாரென நான் அறிவேன்.நீ எனக்கு மோட்சம் கொடுத்தால்தான் உன்னை வெளியே விடுவேன்" என்கிறான் ததிபாண்டன்

கண்ணன் நிஷ்டையில் ஆழ்ந்தான்.வைகுண்டத்திலிருந்து தேருடன் தேவர்கள் வந்தனர்.கண்ணன் அமர்ந்திருந்த தாழியுடன், ததிபாண்டனையும் சேர்த்து வைகுண்டம் எடுத்துச் சென்றனர்

(வைகுண்டம் போனால்..இன்னமும் அப்பானையைப் பார்க்கலாம் என்பது வைணவர்கள் நம்பிக்கை)

இப்படியாக கண்ணனை தாழிக்குள் மறைத்து, அவனைக் காக்க இங்கில்லை என்றேனோ ததிபாண்டன் போல என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

இங்கும் உண்டு என்றேனோ பிரஹலாதனைப் போல் - 51

தனது தவ வலிமையால் அனைத்து தேவர்களையும் பணிய வைத்த அசுரன் இரண்யன்

அவனது மகன் பிரஹலாதன் , எல்லாமே மகாவிஷ்ணுவின் சொரூபம் என நினைப்பவன்.அவன், எட்டெழுத்து மந்திரத்தின் மீது பற்றுறுதியால் இருந்ததால் மரணத்துக்கும் அஞ்சாமல் இருந்தான்

"இரண்யா நம" என தன் தந்தை சொல்லச் சொன்னதைச் சொல்ல மாட்டேன் என்றதுடன்"ஓம் நாராயணாய நமஹ" என்ற திருமந்திரத்தைச் சொல்லி வந்தான் என்றேனோ பிர

;நீ சொல்லும் உன் மகாவிஷ்ணு எங்கிருக்கிறான்?" என இரண்யன் கேட்க, "அவர் தூணிலும் இருப்பார்...துரும்பிலும் இருப்பார்" என்றான் பிரகலாதன்

அதன் பிறகு தூணிலிருந்து நரசிம்மனாக எம்பெருமான் வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்தார்

அப்படிப்பட்ட பிரகலாதனைப் போல , எங்கும் நாராயணன் உண்டு  என்றேனோ என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Sunday, October 23, 2016

இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே - 50

சபரி வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவள்.

 மதங்க மாமுனிவரின் சிஷ்யை.மதங்கருக்கு மோட்சக் காலம் வந்தது..

தனக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் என சபரி, தன் குருவான மதங்கரிடம் வேண்டினாள்.

"இந்தக் காட்டின் வழியே ஸ்ரீராமன் வருவார்.அவருக்குக் கைங்கர்யம் செய்துவிட்டு, நீ மோட்சம் அடைவாயாக" என்றார் முனிவர்

தன் தள்ளாத அவயதிலேயும், ராமன் வருவான்...ராமன் வருவான் ..எனக் காத்திருந்தாள் சபரி

ராமன் வந்தான்..

வீடு போற்றற்குரிய மெய்நெறியினை முற்றும் அறிந்தவர்கள் கூறுவதைப் போல சபரிக் கூறியதையெல்லாம் ராமன் கேட்டான்.

இதைத் தவிர சபரிக்கு வேறு என்ன வேண்டும்.அவளுக்கு அதுவே இனியதானது

(இதைத் தவிர வேறு ஒரு கதையும் சொல்வதுண்டு.அது கதை தானேத் தவிர ராயணத்தில் அது பற்றியில்லை.அந்தக் கதை..
சபரி..தான் உண்ணும் பழங்களில் இனிப்பையறிந்து, அதை ராமனுக்குக் கொடுக்க எடுத்து வைத்து கொடுக்க ராமனும் அக்கனிகளை உண்டானாம்)

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே - 49

பெருமாளின் திருவடியை இக்கரை என்கிறார் பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில்

நமக்குப் பிடித்த ஒன்று நமக்குப் போதும்.அது நம்முடையது.இது நம் மனதிற்குப் பிடிக்கிறது என்றால் அது இக்கரையாகும்.பெரியாழ்வார் வைகுண்டத்தை இக்கரை என்கிறார்

அக்கரையில் விபீடணன்,,

அவன், இக்கரையில் இருக்கும் ராமனே ..அவர் இருக்கும் இடமே தன்னை கரை சேர்க்கும் என அகக்ரையிலிருந்து, இக்கரைக்கு வருகிறான்.அதாவது ராமனிடம் அடைக்கலம் ஆகிறான்

அப்படி வீபீடணனைப் போல ராமனைத் தேடிச் சென்றேனா என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடையாரைப் போலே - 48

பத்து வருடங்கள் தண்டகாரண்யத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ராமன் அகத்தியரின் குடிலுக்கு வருகிறான்.அவனுக்கு, அகத்தியர் ஆயுதங்களைக் கொடுக்கிறார்.

அவற்றைப் பெற்றுக் கொண்டு திரும்புகையில் ஜடாயூவைப் பார்க்கின்றனர் ராம லட்சுமணனும் பிராட்டியும்

ஜடாயூ, தசரதனின் நண்பன்.வயதில் மூத்தவர்,அருணனின் புதல்வர், கழுகளுக்கெல்லாம் அரசன்.அவருக்கு பிராட்டியை ராமன் அறிமுகப்படுத்துகிறான்

 அதற்குப்பின், ராவணன் பர்ணசாலையுடன் சீதையைத் தூக்கிச் செல்லும் போது ஜடாயூ பார்க்கிறார்.ராவணனுடன் போரிடுகிறார்.ராவணன் ஜடாயூவை வாளால் வெட்டி வீழ்த்துகிறான்

சீதையைத் தொலைத்த ராமனும் லட்சுமணனும் அவளைத் தேடிச்செல்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜடாயூவைப் பார்க்கின்றனர்.ராவணன், பிராட்டியைக் கொண்டுச் சென்ற தெந்திசையைக் காட்டிவிட்டு ஜடாயூ மரணம் அடைந்தது

ஜடாயூவிற்கு ,ராமன் நீர்க்கடன் செய்கிறான்.

இதைவிட ஜடாயூவிற்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்

அப்படிப்பட்ட ஜடாயூ போல சீதாபிராட்டிக்கு கைங்கர்யம் என்னால் செய்ய முடியவில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Saturday, October 22, 2016

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே - 47

தன் குடிலில் தர்ப்பப் பாயில் படுத்திருந்த ராமனைப் பார்த்து குகன், "ஐயனே...இங்கு என் குடிலில் உங்களுக்கு உண்ண தினைமாவு உள்ளது.தேவர்கள் விரும்பும் கறிசோறு உள்ளது'உங்களை வைத்துத் தாங்க அடிமைகள் நாங்கள் இருக்கிறோம்.விளையாட மான் களும், கங்கை நதியும் உண்டு.நீங்கள் இங்கேயே தங்கி இருக்கலாம்" என்றான்

"குகனே! நெடுங்காலம் வனத்தில் இருந்து அவதியுறுவேன் என எண்ணூகிறாயா?பதினான்கு  வருடங்கள்  ..அவ்வளவுதான்.நீ எங்களை கங்கையின் தென் கரையில் கொண்டு சேர்ப்பாய்.அங்கு இருக்கும் முனிவர்களுடன் புனித வாழ்வை மேற்கொண்டு விடுகிறோம்.நீ ஓடத்தை எடுத்து வா" என்றான் ராமன்

மறுப்பு ஏதும் பேசாத குகன் ஈஅமனையும், சீதாபிராட்டியையு ம், லட்சுமணனையும் படகில் ஏற்றி அக்கரையில் சேர்க்கிறான்..
ராமனும் குகனுடன் ஐவரானோம் என குகனை தன் சகோதரனாக ஏற்கிறான்

அப்படிப்பட்ட குகனைப் போல எம்பெருமானை அக்கரையில் விடும் பாக்கியம் கிடைத்ததா எனக்கு என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே - 46

ராமன் காட்டுக்குச் செல்லுகையில் அவனுடனேயே செல்கிறான் லட்சுமணன்.

ராமனுக்கு, ஒரு கூட்டம் செய்ய வேண்டிய காரியங்களை ஒற்றையாளாய் லட்சுமணன் செய்கிறானாம்.ரமனுக்கு, அவனைப் போல குறிப்பறிந்து பணியாற்றிட யாரும் இல்லையாம்

பஞ்சவடியில் அவர்கள் தங்க பர்ணசாலை அமைக்கிறான் லட்சுமணன்.பின், ராமனைக் கூப்பிட்டுக் காட்டுகிறான்

அதில் யாகம் நடத்த ஒரு இடம், கடவுள் அறை,சமையல் செய்ய் ஒரு அறை என ஒவ்வொன்றாய்க் காட்டுகிறான்.ஒரு அறையைக் காட்டி.."அது.." என ராமன் கேட்டானாம்.அந்த அறை தாங்களும், சீதா பிராட்டியும்   தங்க என் கிறான் லட்சுமணன்

ராமனின் சிந்தையறிந்து செயல் படும் லட்சுமணனைத் தழுவிக் கொண்ட ராமன்"ஒரு தண்ணீர்ப் பந்தலைப் போல அல்லவா நம் தந்தை உன்னை எனக்குத் தந்துவிட்டு சென்றுள்லார்" என அகமகிழ்ந்தான்

லட்சுமணன் அவதாரம் செய்ததே ராமனுக்கு கைங்கர்யம் செய்ய..அப்படிப்பட்ட லட்சுமணனைப் போல நான் எதுவும் செய்யவில்லையே என்று சொல்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Friday, October 21, 2016

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே - 45

ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பும் முன் கைகேயி பரதனை தன் தந்தையின் நாடான கேகேயத்திற்கு அனுப்புகிறாள்

பரதன் திரும்பி வந்து,. தன் தாயின் இழி செயலால் மனம் வருந்தி மீண்டும் ராமனை காட்டிலிருந்து அழைத்து வர படையுடன் செல்கிறான்

நடுவழியில் அவனைக் காணும் பாரத்வாஜ முனிவர், "நாட்டை ஆள்வதை விடுத்து படையுடன் எங்கே செல்கிறாய்?" என்றார்

முறையுடன் பெறப்படும் அரசை ஆள்வேனேத் தவிர, சதிச் செயலால் பெறப்படும் அரசு எனக்கு வேண்டாம்" என்கிறான் பரதன்

மறுநாள் சித்திரக் கூடம் செல்லும் பரதனை..காட்டிலும் விடாது ராமனைத் துரத்துவதாக எண்ணிய லட்சுமணன், போர்க்கோலம் பூணுகிறான்

ராமனோ. லட்சுமணனை சமாதானம் செய்கிறான்.பின், பரதன் மூலம் தந்தை மறைந்த செய்தியைக் கேள்விப் பட்டு நிர்க்கடன் செலுத்துகிரான் ராமன்

அடுத்து, பரதனின் தவக்கோலத்திற்கான காரணத்தைக்  .கேட்கிறான்.பரதனோ,   ராமனை மீண்டும் அயோத்திக்கு வந்து நாடாள வேண்டும் என்கிறான்

தந்தையின் வாக்கு பொய்க்கக்கூடாது என ராமன் கூறி பரதனே நாடாள வேண்டும் என்கிறான் ராமன்.

பரதன் பிடிவாதமாக இருக்கிறான்

வேறு வழியில்லாத ராமன் , பரதனை நோக்கி,"இது என் ஆணை.பதினாங்கு ஆண்டுகள் நீ அரசாள்வாய்' என்று கூறியதும், பரதன் மறு பேச்சு பேசாது சம்மதிக்கிறான்

இப்படிப்பட்ட பரதனைப் போல "வைத்த இடத்து இருந்தேனா" என்கிறாள் திருக்கோளூற்ப் பெண்

பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே - 43

கண்ணனையும், பலராமனையும் அழைத்துவர கம்சன் அக்ரூரரை அனுப்பினான் என்பதை திருக்கோளூர்ப் பெண் சொன்ன முதல் காரணத்தில் பார்த்தோம்

அக்ரூரர், தேரினைச் செலுத்த, கண்ணனும், பலராமனும் தெருவில் வரும் போது மக்கள் கண்ணனைத் தரிசிக்கக் கூடினர்.பெரும் கூட்டம்.முண்டி அடித்தனர்.அக்கூட்டத்தில் ஒரு பெண்மனியும் இருந்தாள்,அவள் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு முன்னே வந்தாள்.ஆனால் அவளால் நிமிர்ந்து கண்ணனைப் பார்க்க முடியவில்லை.அவள் முது கூனி இருந்தது.

அவள் ஊர் மக்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து,பிழைப்பு நடத்தி வந்தாள்.

பெரிய தாமரை இலையில் மணக்க மணக்க சந்தனத்தை அரைத்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.கண்ணன் வந்தால் தன் கைகளாலேயே அவனுக்கு சந்தணம் பூச வேண்டும் என்றிருந்தாள்

வைணவ சம்பிரதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு

மடிதடவாத சோறு,சுருள் நாறாக பூ, சுண்ணாம்பு கலவாத சந்தனம் இவையே எம்பெருமானுக்கு ஏற்றவை

(மடி தடவாத சோறு என்றால் கைமாறு எதிர்பாராத விருந்தோம்பல் - இதை செய்தவர் விதுரர் ஒருவரே)

மணம்  வீசும் மாலைகள் (இதை பூ வியாபாரி அளித்தார் என பார்த்தோம்)

இப்போது இந்த க்கூனி சந்தனத்துடன் நிற்கிறாள்

கண்ணன் பலராமனுடன் வந்துக் கொண்டிருக்கிறார்கள்

தேரை நிறுத்தி அப்பெண்மணியைக் கூப்பிட்டு, "நல்ல சந்தனம் இருந்தால் எனக்குப் பூசு" என்றான் கண்ணன்..அவளும், கண்ணனின் திருமேனியில் சந்தனத்தைப் பூசினாள்

"இந்த சந்தனம் நன்றாய் இல்லையே.வேறு இல்லையா?
 என்கிறான் கண்ணன்

:வேறு சந்தனம் என்றால் என் மேனியைத்தான் சந்தனமாக பூசிக் கொள்ள வேண்டும்.ஏற்றுக் கொள்" என்றாள்

கண்ணன் சிரித்தவாறே அவளது கூன் முதுகைத் தொட்டு அவளை நிமிர்த்தினான்.

அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு சந்தனம் பூசக் கொடுத்தேனா கூனியைப் போலே என்றாள் திருக்கோளூர்ப்பெண் 

Thursday, October 20, 2016

மூலமென்று அழைத்தேனோ யானையைப் போலே - 42


 இந்திரத்துய்மன் என்ற புராணகால பாண்டி வேந்தன் அகத்திய முனிவரைக் குலகுருவாகக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அகத்தியரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியம் செய்தான். அதனால் வெகுண்ட அகத்தியர், இந்திரத்துய்மனை யானையாகப் பிறக்கும்படி சபித்து விட்டார்.

இந்திரத்துய்மன் திரிகூடாசலம் என்ற மலையை அடுத்திருந்த காட்டில் யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தபோதும் திருமால் பக்தி தொடர்ந்தது. 

அன்றாடம், யானை ஆற்றில் நீராடி, அருகில் இருந்த தாமரைத் தடாகத்திற்குச் செல்லும். அங்கிருந்து பெரிய தாமரை மலர் ஒன்றைத் தன் துதிக்கையில் எடுத்து வந்து, திருமாலின் அர்ச்சாமூர்த்தத்தின் திருவடியில் சமர்ப்பிக்கும். 

அதே காட்டில் இருந்த பொய்கையில் தேவலர் என்ற முனிவர் நீராடிக் கொண்டிருந்தார். ஒரு கந்தர்வன் முனிவரின் காலைப் பிடித்து இழுத்து, முனிவருக்குத் துன்பம் கொடுத்தான். முனிவர் கந்தர்வனை முதலையாகப் பிறக்கும்படி சபித்தார். கந்தர்வன் சாபவிமோசனம் வேண்டினான். 

ஒரு திருமாலடியார் காலைக் கவ்வும்பொழுது, சாபம் நீங்கும் என்று முனிவர் விமோசனம் கூறினார். 

நாட்கள் சென்றன

 கஜேந்திரன் என்ற திருமால் பக்தி மிகுந்த யானையின் காலை முதலை கவ்வி இழுத்தது. தன்னை விடுவித்துக் கொள்ள யானை போராடியது. 

இறுதியில் பெருமாளே காக்க வல்லவர் என்று தெளிவு பெற்று, பெருமாளை, ‘‘ஆதிமூலமே!’’ என்று கூவியழைத்தது. 

கருட வாகனத்தில் விரைந்து வந்த பெருமாள், யானையின் காலுக்கு ஊறு விளையாமல், முதலையின் தலையைத் தன் சக்கரத்தால் கொன்றார். முதலை கந்தர்வ உருவம் பெற்றது. கந்தர்வன் பெருமாளைத் துதித்துச் சென்றான். 

இறுதியில் யானையும் மோட்சம் அடைந்தது

‘‘மூலமென்று அழைத்தேனோ யானையைப் போலே?’’ -கஜேந்திரன் என்ற யானையைப் போல் தான், பெருமாளை ‘‘ஆதிமூலமே!’’ என்று அழைத்து அருள் பெறவில்லையே !  என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

மண்பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே - 41


குரும்பருத்த நம்பி (குரவை நம்பி)என்பவர் திருமலையில் குயவனாக இருந்தார்.மண்பானைகள் செய்து வியாபாரம் செய்து வந்தா.தினமும் மீதி இருக்கும் மண்ணில் பூ செய்து திருமலையப்பனுக்கு சமர்ப்பித்து வந்தார்.திருமலையப்பனும் அவர் அளிக்கும் புஷ்பத்தை  ஏற்று தலையில் சூடிக் கொண்டார்


அந்த ஊரை தொண்டைமான் சக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவன் தினமும் சொர்ணப் பூவை அளித்து பெருமானை வேண்டிக் கொள்வான். ஆனால்..சில தினங்களாக திருமலை ஆண்டவனிடம் ஏற்பட்ட மாறுதலைக் கவனித்தான் 

திருமலையப்பன்  தலையில் மண் புஷ்பத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, தன் சந்தேகத்தை அவரிடமே கேட்டு விடுவோம் என பெருமாலைப் பார்த்து...

"ஸ்வாமி, தங்களிடம் சில நாட்களாக வித்தியாசம் தெரிகிறதே?" என்று கேட்டான். 
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே?" 

"இல்லை ஸ்வாமி, தங்கள் சிரசிலே புதிதாக மண் புஷ்பம் காணப்படுகிறது.  எனக்குத் தெரியாமல் தங்களுக்கு அணிவிப்பது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" 

"அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். ஆனால் அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான்." 

"அப்படி என்ன சுவாமி நிபத்தனை விடுத்துள்ளான், என்னிடம் கூறக் கூடாதா?" 

"அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்லகூடாது.எதற்கும் நாளை அவனிடம் அனுமதி கேட்டு உனக்குச் சொல்கிறேன்" 

மறுநாள் தொண்டைமான் சக்ரவர்த்தி வந்து கேட்டுவிடுவானே என்று, திருமலையப்பனும் குயவன், எப்போதும் போல மண் புஷ்பத்தைக் கொடுக்கும் போது, 
"குயவா, ஒரு நிமிஷம் இரு, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும்." 

"ஸ்வாமி,என்னிடமா?" 

"ஆமாம், தொண்டமான் சக்ரவர்த்தி இந்த புஷ்பம் யார் கொடுக்கிறார்கள் என்று கேட்கிறான். 
நீ தான் சூட்டுகிறாய் என அவனிடம் தெரிவிக்கலாமா?" 

"வேண்டாம் ஸ்வாமி. நான் தான் புஷ்பம் சூடுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் செய்வது சாதாரண தொண்டு, அதை உலகம் அறியச் செய்யவேண்டுமா? வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று இருக்கும் போது, சாதாரண ஒரு புஷ்பம் கைங்கர்யம் யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி. அப்படி தெரியப் 
படுத்தணும் என்றால் எனக்கு உடனே நீங்கள் முக்தி கொடுக்கவேணும்" 
என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான் நம்பி. 

தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் திருமலையப்பன். காலையில் எப்போதும் போல தொண்டமான் சக்ரவர்த்தி வந்தார்,. 

திருமலையப்பன் நேற்று நடந்த விஷயத்தைக் கூறி, தான் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார். 

அந்த குரவை நம்பியைப் போல மண்பூவை இறைவனுக்கு இட்டேனா நான் (இல்லையே) அதனால் இந்த ஊரைவிட்டுப் போகிறேன் என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Wednesday, October 19, 2016

அடி வாங்கினேனோ கொங்குப் பிராட்டியைப் போலே - 40

வைணவத்தில் ஆசார்ய சம்பந்தம் இல்லாது  எம்பெருமான்  சம்பந்தம் இருந்தும் பயனில்லை.ஆசார்ய சம்பந்தம் இருந்தா ல் எ ம்பெருமான் சம்பந்தம் தானே அமைந்து விடும்.இதற்கு கொங்கு பிராட்டியின் சரித்திரமே ஒரு உதாரணம்

ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்  .அவர் மடத்தில் சமைத்த உணவைத் தவிர வேறு எங்கும் உணவு உண்ணக்கூடாது என்ற நியமம் வரும் வரையில் அவர் வெளியில் பிட்சைக் கேட்டு உண்பதே வழக்கம்.இதற்கு மாதுகரம் என்று பெயர்.

இந்த மாதுகரம், ஒரு திருவிழாவைப் போல நடக்கும்.நூற்றுக் கணக்கான பக்தர்கள் உடன் வருவர்.அப்படி ஒருமுறை ஸ்ரீராமானுஜர் சென்ற போது ஒரு பெண்மணி அவரைத் தடுத்து நிறுத்தினார்.

அப்பெண்மணி கொங்கு தேசத்திலிருந்து வந்தவள்.தனது தேசத்தில் நீண்ட நாள் மழை இல்லாததால், அதை ஸ்ரீரங்கநாதரிடம் முறையிட ஸ்ரீரங்கம் வந்திருந்தாள்.வந்த இடத்தில், ஸ்ரீராமானுஜரை வீதி என்றும் பாராது, அதிகாரிகள், செல்வந்தர்கள், வயதானோர் எல்லாம் தண்டனிடும் காட்சியைப் பார்த்தாள்.அதனால், அவரை தடுத்து நிறுத்தினாள்

:"மற்றவர்கள் தண்டனிட்டு சேவிக்கும் அளவிற்கு தங்களிடம் இருப்பது என்ன?" என்றாள்

"என்னிடம் இருக்கும் ஒன்று மற்றவர்களி டம்  இல்லை.மற்றவர்களிடம் இருக்கும் ஒன்று என்னிடம் இல்லை" என்றார் ஸ்ரீராமானுஜர்

"அந்த ஒன்றை எனக்கு உபதேசிக்க வேண்டும்"

அப்பெண்ணை மடத்திற்கு வருமாறு பணித்தார்.அங்கு அவளுக்கு த்வயம் என்னும் மந்திரத்தை உபதேசித்து பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து வைணவப் பெண்ணாக மாற்றினார்.

நெடுநாட்கள் கழித்து ஊருக்குக் கிளம்ப நினைத்தாள் அப்பெண்.அப்போது அவர் உபதேசித்த த்வய மந்திரம் அவளுக்கு மறந்து போனது.அதை அவள் ஸ்ரீராமானுஜரிடம் கூறினாள்.அவரும் அவளுக்கு த்வயத்தை மீண்டும் உபதேசித்தார்.அவள் கிளம்பும் போது தனது திருவடிகளை (பாதுகைகளை) அவளுக்கு அளித்தார்

இதெல்லாம் நடந்து பல ஆண்டுகள் கழித்து, ஸ்ரீராமானுஜர் கொங்கு தேசம் வந்தார்.அப்போது அந்த அம்மையார் சமைத்த உணவை ஒரு சிறு அறைக்குள் எடுத்துச் சென்றுவிட்டு வருவதை அவரின் சீடர்கள் பார்த்தனர்.அறையினுள் சென்று பார்த்த போது,ஸ்ரீராமானுஜர் அவளுக்கு அளித்த பாதுகைகள் வைக்கப்பட்டு, அவற்றிற்கு அவள் நைவேத்தியம் செய்து விட்டு வருவதைப் பார்த்தனர்

அப்படிப்பட்ட கொங்கு பிராட்டியைப் போல திருவடிகளை தான் பெறவில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Tuesday, October 18, 2016

அனுப்பிவையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே - 39

தசரதருக்கு புத்திரப் பாசம் அதிகம்.

ஆகவேதான் அரக்கர்களை வதம் செய்ய ஸ்ரீராமரை அனுப்ப மறுக்கிறார்

விசுவாமித்திரரும் கோபம் கொள்கிறார்

இந்நேரத்தில் வசிஷ்டருக்கு நடக்கப் போகும் சம்பவங்கள் ஞானதிருஷ்டியால் தெரிந்தது

ஸ்ரீராமருக்கும், சீதா பிராட்டியாருக்கும் திருமணம் நடக்க வேண்டியது கட்டாயமல்லவா?ஆகவே அவர் தசரதரைப் பார்த்து, "மன்னா!  உமது புதல்வனுக்கு நல்லது ஒன்று நடந்தால் அதை நீ த்டுப்பாயா?" என்கிறார்.

அத்துடன் இல்லாது, "வெள்ளம் பெருகு, நாடு நலம் பெறுவது போல, உன் புதல்வர்களால் நிறைய நல்ல செயல்கள் நடக்கப் போகின்றன.அதனை தடுத்து விடாதீர்.உமது புதல்வனை அவருடன் அனுப்புக" என்றார்

தசரதரும் மனம் மாறி, தன் புதல்வர்கள் ஸ்ரீராமனையும், லட்சுமணனையும் விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தார்

அன்று வசிஷ்டர் சொன்னது போல "அனுப்பிவையும் " என்று சொல்லவில்லையே நான் என்கிறாள் அப்பெண்.

அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே - 38

திருப்பாணர் தன் யாழை எடுத்து சுருதி சேர்த்து அரங்கனை சேவித்து காவிரிக்கரையில் பாக்களைப் பாடும் வழக்கம் கொண்டவர்.இவர் ஏன்..கோயில் அருகில் பாடாது காவிரிக்கரையில் இருந்து பாடுகிறார்?

அவர் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்டவர்

 ஒருநாள் அவர் அப்படிப் பாடிக்கொண்டிருக்கையில், திருவரங்கன் கோயில் லோகசாரங்கர் என்ற ஜீயர் காவிரியில் குளிக்க வந்தார்.ஜீயருடன் வந்த பக்தர்கள் பாணரை விலகி இருக்கச் சொன்னார்கள்

ஜீயரும், ஏதாவது செய்து அவனை அப்புறப்படுத்துங்கள் என்றார்

தொண்டர்கள் பாணரை கல்லால் அடிக்க ஆரம்பித்தனர்.மெய்மறந்து பாடிக்கொண்டிருந்த பாணர் கலல்டியால் ஏற்பட்ட காயங்களால் சுய நினைவு அடைந்தார்.அனைவரிடமும், தன்னால் ஏற்பட்ட தொந்தரவிற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விலகினார்

தன் பக்தன்மேனியில் கல்லடிப்பட்டு இரத்தக்காயங்கள் ஏற்பட்டத்தால், ஸ்ரீரங்கரும் தனது அர்ச்சாவதார மேனியில் இரத்தம் வழியச் செய்தார்

இதனைக் கண்ட ஜீயர் உடல் நடுங்கியது.அரங்கன் மேனியில் இரத்தம் வடிந்த காரணம் தெரியாது, மன சஞ்சலத்துடன் ஜீயர் உறங்கப்போனார்

அவர் கனவில் பெருமாள் தோன்றி'என் பக்தனைக் கல்லால் அடித்து  பாவம் செய்து விட்டீர்.நாளை அந்தத் திருப்பாணரை உமது தோளில் சுமந்து என் சந்நிதிக்கு வாரும்.அப்போதுதான் குருதி நிற்கும்" என்றார்

லோகசாரங்கர்..தோள்களில் பாணரைச் சுமந்து சந்நிதி வந்தார்.பகதர்கள் கூட்டம் கூடியது.அரங்கன் மேனி குருதியும் நின்றது

திருப்பாணர், எம்பெருமானின் தரிசனம் கண்டு மெய்மறந்து சேவித்தார்.அமலனாதிபிரான் என்று தொடங்கி பத்து பாசுரங்களை மங்களசாசனம் செய்தார்

பாசுரங்கள் முடிந்ததும் அரங்கன், திருப்பாணரை தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொண்டார்

அபப்டி திருப்பாணரைப் போலே, பண்ணிசைத்து அவன் மேனியுடன் கலந்தேனோ நான் என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Monday, October 17, 2016

அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே - 37

கஜேந்திரதாசன் என்று அழைக்கப்பட்டவர் திருக்கச்சி நம்பிகள்.காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் அவரிடம் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவர்

பெருமாளுக்கு சரீரம் மூலம் செய்யும் கைங்கர்யமே பெரிய கைங்கர்யமாகும்  என வாழ்ந்து வருபவர்.அவரிடம் ஸ்ரீராமானுஜர் சில சந்தெகங்களைக் கேட்டார்.திருக்கச்சி மயிலிறகால் செய்யப்பட்ட அந்த பெரிய ஆலவட்டத்தைத் தூண் மீது சாய்த்துவிட்டு வந்தார்

அவர் ஸ்ரீராமானுஜரைப் பார்த்து, "நான் முதலில் ஸ்ரீரங்கப் பெருமாளுக்கு ஆலவட்டம் வீசச் சென்றேன்.அவரொ, தான் காவிரிக்கரையில் இருப்பதாகவும், திருமலை வெங்கடநாதனுக்கு ஆலவட்டம் வீசச்சொன்னார்.ஆனால், அந்த திருவேங்கடநாதனோ, தான் மலைகள் சுழ்ந்த இடத்தில் இருப்பதாகவும், யாகக்குண்டங்கள் நிரைந்த காஞ்சியில் இருக்கும் எம்பெருமானுக்கு ஆலவட்டம் வீசச் சொன்னார்கள்.காஞ்சியில் எனது கைங்கர்யம் தொடருகிறது.அதனாலேயே, எம்பெருமானிடம் பேசும் பாக்கியம் கிடைத்தது" என்றார்.

ஸ்ரீராமானுஜர், "என்னிடம் ஆறு கேள்விகள் உள்ளன.அதற்கான பதிலை, பெருமாளிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார்.

அவரது ஆறு கேள்விகள்

1) பரம்பொருள் என்பவர் யார்
2)நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உண்மை தத்துவம் எது?
3)பரமனை அடைவடஹ்ற்கான உபாயம் எது?
4) மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா/
5)மோட்சம் பெறுவது எப்போது
6)குருவாக யாரை ஏற்பது?

ஸ்ரீராமானுஜர் எழுப்பிய சந்தேகங்களை திருக்கச்சியார் பெருமாளிடம் கேட்க, அவர் உரைத்த பதில்கள் .

விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை தந்துவங்களாயின

1)பரம்பொருள் நாமே! அனைவரும் அடைய வேண்டிய பரம்பொருள் நாமே

2)பேதமை தர்சனம்.எதுவும் மாயைஅல்ல.எல்லாமே உண்மை.விசிஷ்டாத்வைதமாகிய ஆத்மா இறைவன்.இதுபற்றிய வேறுபாடே தத்துவம்

3)உபாயம் ப்ரபத்தியே..அகங்காரத்தை விடுத்து இறைவனை சரணடைவதே உபாயம்.அதாவது பிரபத்தி எனும் சரணாகதியே உபாயம்

4)அந்திமஸ்மிருதி வேண்டாம்.இறக்கும் தறுவாயில் மட்டும் இறைவனை எண்ணினால் போதாது.உடல் நன்றாக திறனோடு இருக்கையிலேயெ இறைவனை நினைத்தால் போதுமப்படியிருந்தால் இறக்கும் நேரத்தில் இறைவனுக்கு நம் சிந்த்னை வரும்

5)சரீரம் விடுகையில்மோட்சம் சரணம்.அடைந்தவருக்கு உடலை விடுகையில் மோட்சம்

6)பெரிய நம்பிகளை குருவாகப் பற்றுவது

(இப்படி ஒரு பதிலைத்தான் ராமானுஜம் எதிர்பார்த்தார் )

இப்படி எம்பெருமானிடம் நேரில் பேசும் பாக்கியத்தை நான் பெற்றேனோ திருக்கச்சியார் போலே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Sunday, October 16, 2016

இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார்ப் போலே - 36

தன் பெயர், குலம், கற்ற வேதம், அரங்கன் ஆகிய அனைத்தையும் மறந்து தாசியின் வீடே கதியாகிக் கிடந்தார் தொண்டரடிப் பொடியார்

கண்ணன் கம்சனைக் காண வந்த போது மாலாக்காரர் (மாலை வியாபாரம் செய்பவர்) ஒருவர் கண்ணனுக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தாராம்.அவரது உண்மை அன்பை ஏற்ற கண்னன் அவருக்கு முக்தியளித்தாராம்

அதேபோன்று அரங்கன் கோயில் அருகில் நந்தவனம் அமைத்து, தினமும் துளசிமாலையக் கட்டி அரங்கனுக்குச்  சூடி அழகுப்பார்த்தவர் விப்ரனாராயணன் எனும் அந்தணர் (இவரே தொண்டரடிப்பொடியார்)

அபப்டிப்பட்டவர் புலனடக்கம் இழந்து தாசிவீடே எனக் கிடந்தார்.அனைத்துப் பொருளையும் இழந்தார்.

"காசிருந்தால் வா...இல்லையேல் வெளியே போ" என தாசி தேவதேவி அவரை வெளியில் துரத்தி கதவை அடைத்தாள்

அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது."பணமிருந்தால் வா...என்று சொன்னேனே!" எங்க் கதவைத் திறந்தவள், வாயிலில் நிற்பவரைப் பார்த்து, "யார் நீ?" என்றாள்

"நான் விப்ரநாராயணனுக்கு வேண்டற்பட்டவன்.அவரிடம் காசில்லை.ஆதலால் எனக்குச் சொந்தமான பொன்வட்டியைக் கொடுக்கிறேன்.அவனை அனுமதி" என்றார்

தெவதேவி பொன்வட்டியை வாங்கிக்கொண்டாள்.விப்ரநாராயணனுக்கு கதவுத் திறந்தது

மறுநாள் கோயில் திறக்கப்பட்டது.பெருமாலின் வட்டியைக் காணவில்லை.கோயிலில் இருந்த கடைநிலை ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவனை அடித்துச் சிறையில் அடைத்தனர்
 அந்த கடைநிலை ஊழியரின் காதலி தேவதேவியின் சேடிப் பெண்.அவல் வந்து, விப்ரநாராயணனின் நண்பர் ஒருவர் பொன்வட்டியைக் கொடுத்ததைக் கூறினாள்.

விப்ரநாராயணன்  சிறையெடுக்கப்பட்டார்.

தன் தவறை உணர்ந்த தொடரடிப்பொடியாழ்வார்..தன் குலப்பெருமையை இழந்து, நாயினும் கீழானேனே என வருந்தினார்.திருமாலை என்ற 45 பாசுரங்கள் பாடினார்

மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி வட்டியைக் கொடுத்தது தானே என்று சொல்லி விப்ரநாராயணரை அகம், புறம் இருச் சிறைகளிலிருந்தும் விடிவித்தார்

ஒருமாலை அவர் அவர் அரங்கனுக்குக் கட்டும் துளசிமாலை
இரண்டாவது மாலை அவர் மீது பாடப்பட்ட 45 பாசுரங்கள் அடங்கிய திருமாலை

அப்படி இருமாலைகளை நான் எம்பெருமானுக்கு ஈந்தேனா தொண்டரடியார்ப் போல ..(இல்லையே .) என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Saturday, October 15, 2016

இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே - 35

ஊர்மக்கள் புரம் பேசுவதைக் கேட்டு ஸ்ரீராமன் . லட்சுமணனிடம், சீதாப்பிராட்டியைக் காட்டில் கொண்டு சென்று விடப் பணித்தார்.

லட்சுமணனும், தேரில் தேரில் பிராட்டியை ஏற்றிக்கொண்டு, காட்டின் மையப் பகுதிக்கு வந்தான்.

சீதையை இறக்கிவிட்டு விட்டு தலை குனிந்து நின்றான்.

"பெண்களுக்கு கணவந்தான் தெய்வம்.அவர் கட்டளைக்கு அடி பணிகிறேன்.ஸ்ரீராமனின், கர்ப்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்''என்பதையும் அவரிடம் சொல்" என்கிறாள் பிராட்டி

வால்மீகி முனிவர் சீதைக்கு அடக்கலம் கொடுத்தார்.சீதையும் அவரது ஆசிரமத்தில் அழகான இரு குழந்தைகளைப் பெற்றாள்

அக்குழந்தைகளை கையில் வாங்கிக் கொண்டார் வால்மீகி.தன் தர்ப்பைப்புல்லின் மேல் பாகமான குசம் என்று ஒரு குழ்ந்தைக்கும், கீழ் பாகமான இலவம் என ஒரு குழந்தைக்கும் பெயரிட்டார்.

இராமகாதையை அவர்களுக்குச் சொல்லி ஊரெல்லாம் அதை பாட வைத்தார்.

ஸ்ரீராமன் அசுவமேத யாகம் செய்தார்.பரதன் ஒருநாள் இரு சிறுவர்களையும் அவரிடம் அழைத்து வந்தான்.அவர்கள் பாடிய இராமகாதையை ஸ்ரீராமனேக் கேட்டார்.

இதற்குக் காரணமானவர் வால்மீகி.இரு குழ்ந்தைகளை வளர்க்கும் பேறினைப் பெற்றவர்.அப்படிப்பட்ட பேறு எனக்குக் கிடைக்கவில்லையே

"இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்  

Friday, October 14, 2016

இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே! - 34

திருக்கோவிலூர்...

ஒருநாள்...இரவு நேரம்..பெரும் மழை..

எம்பெருமானை சேவிக்க வந்த பொய்கையாழ்வார் மழைக்கு ஒதுங்க எண்ணினார்.ஒரு மாளிகை திறந்திருந்தது.அம்மாளிகையின் கதவைத் தட்டினார்

மிருகண்டு முனிவர் வந்தார்..

"மழை நிற்கும் வரை இங்கு தங்க இடம் உண்டா?" என்றார் பொய்கையாழ்வார்

இந்த இடைக்கழிதான் உண்டு என்றபடியே ஒரு ரேழியைக் காட்டிவிட்டு போனார்

சின்ன ரேழி..வெளிச்சமும் இல்லை.ஒருவர் மட்டுமே படுக்க முடியும்.சரி , அங்கேயே டஹ்ங்கிவிட்டு, காலையில் பெருமாளை சேவிக்கலாம் என எண்ணினார்

மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை.பொய்கையாழ்வார் போய்க் கதவைத் திறந்தார்.இப்போது பூதத்தாழ்வார்

"மழைக்கு த்ங்க இடம் கிடைக்குமா"?

"சின்ன இடைக்கழி உள்ளது.ஒருவர் படுக்கலாம்.இருவர் இருக்கலாம்.வாருங்கள்"

பூதத்தாழ்வார் உள்ளே போனார். மீண்டும் கதவு தட்டப்பட்டது.

பூதத்தாழ்வார் போய்க் கதவைத் திறந்தார்.வெளியே பேயாழ்வார்

"வெளியே மழை.தங்க இடம் உண்டா?'

"ஒரு இடைக்கழி இருக்கிறது.ஒருவர் படுக்கலாம்.இருவர் இருக்கலாம்.மூவர் நிற்கலாம்.வாருங்கள்"

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாமல் இருட்டு

அதே சமயத்தில், சந்நிதியில் வந்து நம்மைப் பாடி மங்களாசாசனம் செய்வார்கள் என எதிர்பார்த்த திருவிக்கிரமன், அவர்களது பாசுரங்களைக் கேட்க, அவர்கள் புலன்களுக்கு அகப்படாமல்  இடைக்கழியில் வந்து நெருங்கி நின்றார் (இதனாலேயே..இங்கு பெருமாளுக்கு நெருக்கி நின்ற பெருமாள் என்று பெயர்)

திடீரென எண் நெருகக்ம்.தங்கியுள்ள நான்காவது நபர் யார்? எனத் தெரியாது பொய்கையாழ்வாரும்,பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற..நெடிய உருவுடன்  உலகளந்த பெருமாள்..திருவிக்கிரமன் பேயாழ்வார் முன் எழுந்தருளினார்

பின், அவர்கள் ஒவ்வொரு திவ்வியத்தலங்களுக்கும் சென்று ஆளுக்கு நூறு பாசுரம் மூலம் 300 திருவந்திகளைப் பாடி..முதலாழ்வார்கள் என்று சிறப்புப் பெற்றனர்

அபப்டிப்படட் எம்பெருமானை இடைக்கழியில் இருட்டில் கண்ட பெருமை எனக்கு இல்லையே என்றாள் திருக்கோளூர்ப் பெண்

Thursday, October 13, 2016

இளைப்புவிடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே - 33

ஸ்ரீநாராயணர் முன்னிலையில் சாதி பேதம் கூடாது என உரைத்தது வைஷ்ணவம்.ஸ்ரீராமாநுஜர் அதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.

இனி நம்பாடுவான் கதை

108 திவ்விய தேசங்களில் திருக்குறுங்குடியும் ஒன்று.மகேந்திர மலை என்ற மலையை அடுத்து அமைந்துள்ள இவ்விடத்தில் எம்பெருமான், நின்ற நம்பி,இருந்த நம்பி,கிடந்த நம்பி,திருப்பாற்கடல் நம்பி,மலைமேல் நம்பி என ஐந்து விதமாக எழுந்தருளியுள்ளார்.வராக அவதாரம் எடுத்த பெருமாள் தன் உடலைக் குறுக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு இப்பெயர்


நம்பாடுவான் ஒரு வைணவ பக்தர்.பாணர் குலத்தில் பிறந்தவர்.தன்னுடைய குலத்தின் காரணமாக கோயிலின் வாயிலில் நின்று பாடிவிட்டு செல்வது அவரது வழக்கம்.அவரது பண்ணில் மயங்கி பெருமாளே அவரை நம்பாடுவான் என அழைக்க, அதுவே நிரந்தரமானது

ஒருநாள் அவர் பண்ணிசைக்க சந்நிதி வாசல் செல்கையில், ஒரு ராட்சசன் தடுத்து;'உன்னை உணவாக உண்ணப் போகிறேன்" என்றது

"இன்று ஏகாதசி.எம்பெருமானின் முன் பாடிவிட்டு , என் ஏகாதசி விரதத்தையும் முடித்துவிட்டு வருகிறேன்.அதுவரை பொறுத்திரு" என்றார்

ராட்சசனும் அவர் சொன்ன வாக்குறுதியை நம்பி அவரை அனுப்பியது

சந்நிதி அடைந்து, வழக்கம் போல, சந்நிதியிலிருந்து விலகிப் பாடினார் நம்பாடுவான்,

ஆனால், எம்பெருமான், கொடி மரம், கருடன் ஆகியவற்றை விலகி இருக்கச் சொல்லி அங்கிருந்த வண்ணமே சேவை சாதித்தார்

பின்னர், கொடுத்த வாக்கைக் காக்க ராட்சசனிடம் சென்றார்.வழியில் ஒரு முதியவர், "நீ போகாதே! தன் உயிரைக் காத்துக் கொள்ள வாக்குத் தவறினால் தவறில்லை" என்றார்

ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பதுதான் ஸ்ரீவைஷ்ணவின் த்ருமம்" என் நம்பாடுவான்  மறுத்துவிட்டார்

திரும்பி வாக்குத் தவறாது வந்தவரைப் பார்த்த ராட்சசன். நான் உன்னை உண்ணாதிருக்க ஒரு நிபந்தனை.நீ பாடிய பாடல்களின் பலனை எனக்கு அளித்திடு" என்றான்

ஆனால் நம்பாடுவான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனாலும் ராட்சசன் சொன்னான் "நான் முற்பிறவியில் ஒரு அந்தணன்.எனக்கு சாபவொமோசனம் வேண்டுமாயின்..நீ எம்பெருமான் முன் பாடிய கைசிக பண்ணின் பலனையாவது எனக்குக் கொடு" என்றான்

"சரி" என இசைந்தார் நம்பாடுவான்.இன்றும் கைசிக ஏகாதசி (கார்த்திகை மாதம்) அக்கோயில் விழா கொண்டாடுகிறது

அறநெறி பிறழாது நம்பாடுவான், ராட்சசன் இளைப்பின் தாகத்தை தீர்த்ததால்."இளைப்புவிடாய் தீர்த்தேனொ நம்பாடுவான் போலே" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

கொன்டு திரிந்தேனோ திருவடியைப் போலே - 32

வைஷ்ணவத்தில் இரு திருவடிகள்

பெரிய திருவடிகள் - கருடாழ்வார்.
இரண்டாவது திருவடி - ஹனுமான்

கருடன் தன் தாயான வினதையின் அடிமைத்தனத்தை நீக்கும் பொருட்டு அமிர்தகலசத்தை  தேவர்களிடம் இருந்து கவர்ந்து  வரச் சென்று தேவர்களுடன் போரிட்டு இறுதியில் மகாவிஷ்ணுவின் ஆணைப்படி பணிந்து அவர்க்கு வாகனமாகிறார்

பெரியாழ்வார் கூடல் மாநகர் மன்னன் சந்தேகத்தைத்  தீர்த்து, பொற்கிழியைப் பெற்றுக் கொண்டு யானை மீதேறி மதுரை வீதிகளில் , , யானை மீதேறி பவனி வரும் போது, எம்பெருமான் தேவி சகிதம் கருட வாகனத்தில் காட்சியளித்தார்

ஆழ்வார்திருநகரியில் கருடனுக்கென தனி உற்சவமே உண்டு.இங்குக் கோவில் வெளிச்சுவரில் அமர்ந்திருக்கும் கருடன் விஷேசமானவன்

இந்த கருடனுக்கு அருள்பட்சிராஜர் என்ற பெயரும் உண்டு.ஒருமுறை இஸ்லாமியர்கள் படையெடுப்பின் காரணமாக திருவுருவச் சிலைகளுக்கு, பாதுகாப்பின்மை ஏற்பட , நம்மாழ்வாரின் காய்ச்சிய திருமேனியை எடுத்துக் கொண்டு கோழிக்கோட்டில் மறைத்து வைத்தனர்

மீண்டும் அமைதித் திரும்பியதும், ஒளித்து வைத்த சிலையைத் தெடிச் செல்கையில். ஒளித்த இடம் மறந்து விடுகிறது.அப்போது கருடன் பறந்து வந்து.இடத்தை அடையாளம் சொன்னது,நம்மாழ்வார் சிலை மீண்டும் சந்நிதியில் எழுந்தருளச் செய்தனர்

கருடாழ்வார் போல எம்பெருமானை சுமந்து செல்லும் பாக்கியம் தனக்கு இல்லையே என்பதையே, திருக்கோளூர்ப் பெண் :கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே என சொல்கிறாள்

Wednesday, October 12, 2016

குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே - 31

காச்யபர் என்ற மகரிஷிக்கு கத்ரு,வினதை என இரு மனைவிகள்.இவர்கள் காச்யபரிடம் புத்திரபாக்கியம் வேண்டும் என வேண்டினர்.

கத்ரு தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என வரம் கேட்டாள்

வினதை தனக்கு அறிவுடை இரண்டு புத்திரர்களைக் கேட்டாள்.அவளுக்கு அருணனும், கருடனும் பிறக்கின்றனர்.சூரியனின் தேரோட்டியாகிறான் அருணன்.

கத்ருவின் ஆயிரம் புதல்வர்களும் ஆயிரம் அரவங்களாக பிறக்கின்றனர்.அவர்களுள் மூத்தவன் ஆதிசேஷன்

ஆதிசேஷன், தன் சகோதரர்கள் எப்போதும் பொறாமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதாலும், கருடனுடன் எப்போதும் சண்டையிடுபவர்களாகவும் இருப்பது கண்டு மனவேதனையடைந்தார்.

பிரம்மாவிடம், "என் மனம் எப்போதும் தர்மசிந்தனையில் இருக்க வேண்டும்" என வேண்டினார்

அதற்கு பிரம்மா, எப்போதும் அதன் மையப்புள்ளியிலிருந்து அசைந்த வண்ணம் இருக்கும் பூமியைஅதன் அச்சிலிருந்துஅசையாது உனது ஆயிரம் தலைகளால் பிடித்துக் கொள்' என்கிறார்.

இந்த பூவுலகை ஆதிசேஷன் தலையில் தாங்கி வருவதாக மகாபாரதம் கூறுகிறது

அப்படிப்பட்ட ஆதிசேஷனை எம்பெருமான் தன் படுக்கையாக்கிக் கொண்டார்.

அந்த ஆதிசேஷன் பிராட்டியுடன் இருக்கும் எம்பெருமானுக்குக் குடையாகவும்,சிங்காதனமாகவும், நிற்கும்போது காலணியாகவும், அவர் பள்ளிக் கொண்டபோது பாற்கடலில் பாயாகவும்,எப்போதும் ஒளி மிகுந்த விளக்காகவும், பரிவட்டமாகவும் அணைத்துக் கொள்ளும் போது தலையணையாகவும் விளங்குவதாகப் பாடல் உண்டு

ஸ்ரீராமானுஜரின் சீடர்களில் ஒருவர் பட்டர்.அவருக்கு சர்வதந்திரஸ்வதந்திரம்
என்னும் சிறப்புப் பெயர் உண்டு.இது பிடிக்காத ஒருவர் அவரை சோதிக்க எண்ணி ஒரு குடத்தினுள் பாம்பு ஒன்றைப் போட்டு அதன் வாயை இறுக்க மூடி அவரிடம் கொடுத்து, "உள்ளே என்ன இருக்கிறது" எனக் கேட்டார்

கையில் குடத்தை வாங்கிய பட்டர்..குடத்தினுள் பாம்பு அசைவதை உணர்ந்தார்."இது எம்பெருமானின் குடை" என்றார்

"பட்டரே! உள்ளே இருப்பது பாம்பு.உங்கள் எண்ணம் தவறு" என்றார் அவர்

அதற்கு பட்டர், "இந்த பாம்புதான் எம்பெருமானுக்கு குடையாக இருப்பதாக பொய்கையாழ்வார் பாடியுள்ளார்' என பதிலுரைக்கிறார்
அந்த குடை முதலானது போல அனந்தாழ்வார் விளங்கினாரே..நான் அப்படியில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்.

Tuesday, October 11, 2016

கடித்து பெற்றேனோ திருமங்கையாழ்வாரப் போலே - 30

சிறுவாலி என்ற நாட்டின் குறுநில மன்னராக விளங்கியவர் பரகாலர் என்னும் திருமங்கையாழ்வார்.இவர் குமுதவல்லியின் அழகில் மயங்கி முறையாகப் பெண் கேட்டுச் செல்கிறார்

ஆனால், குமுதவல்லியோ, வைஷ்ணவரைத் தவிர வேறொருவரை மணக்க மாட்டேன் என்கிறாள்.அதனால் பரகாலர், பஞ்சசமஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீவைஷ்ணவர் ஆகிறார்.

இப்போது, குமுதவல்லி, அவர் 1008 வைஷ்ணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை  விதிக்கிறாள்.அதையும் அவர் நிறைவேற்றுகிறார்

குமுதவல்லி சொன்னதற்காக, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், பெருமாள் கோயில்கள் திருப்பணிகளுக்கும் தன் செவத்தை செலவிடுகிறார்.அதனால், தன்னை குறுநிலமன்னனாக ஆக்கிய சோழ அரசருக்கு அவரால் கப்பம் செலுத்த முடியவில்லை.

அதனால் கைதாகிறார்.

அன்றிரவு பெருமாள் அவர் கனவில் தோன்றி, வேகவதி நதிக்கரையில் புதையல் இருக்கும் ரகசியத்தைக் கூறுகிறார்.சோழ மன்னன் அனுமதியுடன், சிறையில்   இருந்து வருபவர்..புதையலைக் கண்டெடுக்கிறார்

அதில் ஒருபகுதியை கப்பம் கட்டிவிட்டதால் , மீதத்தை பழையபடி செலவிடுகிறார்

மீண்டும் வறுமை

பரகாலராகிய திருமங்கையாழ்வார் இப்போது புது முடிவுக்கு வருகிறார்.
களவு புரிந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதே அது

நா ன் கு பேருடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்ய ஆரம்பிக்கிறார்.செல்வந்தர்கள் தாக்கப் படுகின்றனர்.பொருள்கள் களவாடப்பட்டு எம்பெருமானின் கைங்கர்யத்திற்கு செலவிடப் படுகிறது.

ஒருநாள் பெருமாள், அந்தண வேடமிட்டு லட்சுமியுடன் ஒரு திருமண கோஷ்டி போல தன் பரிவாரங்களுடன் கிளம்பினார்

அவர்களைப் பார்த்ததும் திருமங்கையாழ்வார் "நில்" என்றார்"நகைகள்   எல்லாவற்றையும் கழட்டுங்கள்" என்றார்

பெருமாளும் பயந்தவர் போல நகைகள் அனைத்தையும் கழட்டினார்.லட்சுமியும் கழட்டினார்.கடைசியில், பிராட்டியின் மெட்டி மட்டுமே இருந்தது.

அதைக்கூட விட்டு வைக்க மனமில்லாத திருமங்கையாழ்வார்..அதையும் கழட்டுங்கள் என்றார்.ஆனால் அதை அவரால் கழட்ட முடியவில்லை.

உடனே ஆழ்வார் மண்டியிட்டு கழட்டப் பார்த்தார்.இயலவில்லை.பின்னர், தன் பற்களால் கடித்து கழற்றினார்

எம்பெருமான் சிரித்துக் கொண்டே "நீர் நமது கலியனோ" என்றார்

கழற்றிய ஆபரணங்களை ஒரு பட்டுத் துணியில் மூட்டையாய்க் கட்டி தூக்க முயன்றார் ஆழ்வார்.தூக்க முடியாமல் கனத்தது.

உடன் பெருமாள் "என்னிடம் ஒரு மந்திர சக்தி உள்ளது.அதைச் சொன்னால் எளிதாகத் தூக்க முடியும்" என்றார்.அருகில் இருந்த ஆலமரத்தடியில் அவரை அமர்த்தி, திருமந்திரத்தை ஓதினார்

திருமங்கையாழ்வார் கதறினார்."கண்டுகொண்டேன் நாராயணா என்ற நாமம்" என கூத்தாடினார்

பின்னர் தன் அனுபவங்களை

ஆசு, சித்திரம்,மதுரம்,விஸ்தாரம் என நான்குவகைக் கவிகளாகப்    பாடினார்.

நான்கு வேதங்களின் உட்பொருளை நான்கு பிரபந்தங்களாகப் பாடினார்.

சிக்க்ஷை, வியாகரணம்,கல்பம்,நிருத்தம்,ஜோதிசம்,சந்தஸ்  என ஆறு பிரிவுகளின் உட்பிரிவை பெரிய திருமொழி,திருக்குறுதாண்டகம்,திருநெடுந்தாண்டகம்,திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடலில் பாடி வைத்தார்

நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் அதிக பாசுரங்களை பாடி எம்பெருமான் சந்நிதிகளை மங்களாசாசனம் செய்தார்

மெட்டியை கல்லால் கடிக்கப்  போக ;எட்டெழுத்து மந்திரத்தை பகவானே ஆசானாக இருந்து உபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர் திருமங்கையாழ்வார்

அந்த பாக்கியத்தைப் பெறாத நான் இங்கிருந்தாலென்ன..போனாலென்ன என்கிறாள் திருல்லோளூர்ப் பெண்.
  

கர்மத்தால் பெற்றேனோ ஜனகனைப் போலே - 29

மிதிலை மன்னர் ஜனகர், பிரம்மஞானம் அடைய ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்தார்.தன் ஞான குருவைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வைத்தார்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் பிரம்ம ஞானிகளின் சபையினைக் கூட்டி, வாதம் நடத்தி, எவர் வாதத்தில் வெல்கின்றனரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் பசுக்களும் தருவதாக
  அறிவித்தார்.பல ஞானிகள் கூடினர்.யாக்ஞவல்கியரும் வருகிறார்

இச்சபையில் யார் தன்னை பிரம்மஞானி என்கிறாரோ அவரே ஆயிரம் பொற்காசுகளும்,பசுக்கலையும் ஓட்டிச் செல்லலாம்.

அதில், யாக்ஞவல்கியரே பிரம்ம ஞானி ஆகிறார். ஜனகர்  சீடராகச் சேர்ந்து  கர்மஞானம் கற்று மிகப்பெரிய ஞானியாக விளங்கினார்

ஜனகரின் ஞானத்தை வெளியுலகிற்கு அறிவிக்க பிரம்மஞானி விரும்பினார்.தனது மந்திர சக்தியால் மிதிலை நகரம் நெருப்புப் பற்றி எரிவதைப் போல ஒரு மாயையை ஏற்படுத்தினார்.சீடர்கள் அனைவரும்,..தங்கள் சொத்துகளை காத்துக் கொள்ள அலறி அடித்து ஓடினர்.ஆனால், ஜனகரோ அசையவில்லை.

பின்னர், ஓடிய சீடர்கள் அது மாயை என உணர்ந்து, வெட்கித் தலை குனிந்தனர்.

யாக்ஞவல்கியர், ஜனகரைப் பார்த்து,"ஜனகரே! அனைவரும் ஓடிய போதும் நீங்கள் ஏன் ஓடவில்லை?" என்றார்

"ஆத்மா அழிவற்றது.இடையில் வருபவை அழியக்கூடியவை.ஆத்மஞானம் அடைய வேண்டுமானால், எனது இப்போதய நிஷ்டையிலிருந்து நான் வெளியே வருவதாக இல்லை" என்றார் ஜனகர்

ஜனகர், ஒரு ராஜ்ஜியத்தின் மன்னனாய் இருந்த போதும் கர்மஞானத்தைக் கடைபிடித்து வந்தார்

அந்த ஜனகரைப் போல கர்மஞானத்தை நான் கடைபிடிக்கவில்லையே..நான் ஏன் இந்த ஊரிலிருக்க வேண்டும் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

Monday, October 10, 2016

அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே - 28

சஞ்சயன் ,திருதராஷ்டரின் ரத சாரதி,அவனது, அறிவு, பேச்சாற்றல் எல்லாம் அவனை திருதராஷ்டிரரின் அந்தரங்கச் செயலாளராக உயர்த்திவிட்டது.

அப்படிப்பட்ட சஞ்சயன், இரண்டு அந்தரங்கமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.தனக்கு வியாச மகரிஷி அளித்த மந்திரசக்தியால் திருதராஷ்டிரரின் அரண்மனையில் அமர்ந்தபடி குருக்ஷேத்திரக் காட்சிகளை  நேரில் பார்ப்பது போன்று தன் மன்னனுக்குக் கூறினான்

கௌரவர்கள் சார்பில், பாண்டவர்களிடம் சஞ்சயன் தூது செல்கிறான்.அதற்குமுன் திருதராஷ்டிரரிடம், தர்ம, நியாயங்களைப் பேசுகிறான்.ஆனால், தூதுவனாகிவிட்டபடியால், பாண்டவர்களிடம் போர் புரியாததால் ஏற்படும் நன்மைகளைக் கூறுகிறான்.அதன்பின் கிருஷ்ணரைப் பார்க்கச் செல்கிறான்.

நேரம் கடந்துவிட்டபடியால், கிருஷ்ணர் தன் படுக்கையறையில் இருக்கிறார்.
சஞ்சயனை அங்கேயே வரச் சொல்கிறார்.அவன் உள்ளே நுழைந்த போது, கிருஷ்ணர், சத்யபாமாவின் மடியில் தலைவைத்து படுத்திருக்க, அவருடைய பாதங்களை தன் மடியில் தாங்கியபடி அர்ஜுனனின் பாதங்கள் திரௌபதியின் மடியில் இருக்கும் படி படுத்திருக்கிறார்கள் (சஞ்சயனை தன் படுக்கையறைவரை சஞ்சயனை அனுமதித்ததன் மூலம் தங்களுக்குள்ளே உள்ள நெருக்கத்தை உணர்த்தினார் கிருஷ்ணர்)

கிருஷ்ணர், போரைத் தவிர்த்தல் இயலாது எனக் கூறி சஞ்சயனைத் திருப்பி அனுப்புகிறார்

சஞ்சயன் தான் தூது சென்று கொண்டு வந்த செய்தியையும், கிருஷ்ணர் தன்னை படுக்கையறைவரை அனுமதித்ததையும் கூறுகிறான்

அந்த எம்பெருமானின் அந்தரங்கக் கோலத்தை பார்க்கும் பாக்கியம் பெற்ற சஞ்சயன் போல நான் இல்லையே..(நான் எதற்கு இவ்வூரில் இருக்க வேண்டும்) என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே - 27

ஸ்ரீராமர், லட்சுமணன்,சீதா பிராட்டி ஆகியோர் தண்டகாரண்யத்தில் முனிவர்களின் ஆசிரமத்தில் தங்கி, அவர்களுக்கு துன்பம் ஏற்படாமல் பத்து ஆண்டுகள் காத்தனர்

பின், மூவரும் கிளம்பி அகஸ்தியரின் ஆசிரமம் வந்தனர்

அகஸ்தியர் ராமனை வரவேற்றார்.ராமனும் அவரை வணங்கி நின்றார்.பின், அகஸ்தியர் சிவபெருமாள் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த சிவதனுசுவை ராமருக்குக் கொடுத்தார்

தவிர்த்து ஒரு வாளினைக் கொடுத்தார்
உலகம் முழுதும் ஒரு தட்டில் வைத்துஅகஸ்தியர் கொடுத்ததை மற்றொரு தட்டில் வைத்தாலும்...அகஸ்தியர் கொடுத்ததற்கு இணையாகாதாம்...கம்பர் சொல்கிறார்

தவிர்த்து, ஒரு சமயம் சிவபெருமான் மேருவை வில்லாக வளைத்து,மகாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டு திரிபுரத்தை எரித்ததாகக் கூறப்படும் அம்பினையும் கொடுத்தார்

அப்படி அகஸ்தியரைப் போல எம்பெருமானுக்கு நான் ஆயுதங்களைக் கொடுக்கவில்லயே (எனக்கு இங்கு இருக்க என்ன தகுதி) என்கிறாள் அப்பெண்

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே - 26

கண்ணனும், சுதாமனும் (குசேலரின் பெயர்) சாந்திபனி முனிவரிடம் குருகுலவாசத்தில் கல்வி பயின்று வந்தனர்

ஒருநாள் முனிவர், காட்டிலிருந்து காய்கறிகளும்,அடுப்பெரிக்க சுள்ளியும் கொண்டுவரச் சொல்லி இருவரிடமும் பணித்தார்.இருவரும் அதற்காக காட்டிற்குள் போனபோது, பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது.அதனால் இரவு முழுதும் ஒரு பெரிய மரத்தடியில் தங்கினர்

மறுநாள், முனிவர் இவர்களைத் தேடி வந்த போது, இரவு முழுதும் அவர்கள் பட்ட சிரமங்களைக் கேட்டறிந்தார்.பின், "குருவிற்காக இவ்வளவு துன்பப்பட்ட நீங்கள் பிற்காலத்தில் வளத்துடன் வாழ்வீர்களாக" என ஆசிர்வதித்தார்

அதன்பின்னர்...

துவாரகையில் கம்சனை அழித்த பின்னர் கண்ணன் துவாரகையின் மன்னன் ஆனான்.குசேலரோ அளவிற்கு அதிகமாகக் குழந்தைகளைப் பெற்று வறுமையில் வாடினார்

ஆனால், ஆச்சார்யனின் வாக்கு பலிக்காமல் இருக்கக் கூடாது இல்லையா..

அதனால் , குசேலரின் மனைவியின் மனதிற்குள் புகுந்து கொண்டு கண்ணன் அவளை இப்படி பேச வைத்தான்..

"உங்கள் பால்ய சிநேகிதர், கண்ணன் இப்போது மன்னனாக இருக்கிறார்.அவரிடம் போய் நீங்கள் உதவிக் கேட்கக் கூடாதா"

குசேலரும், மனைவி கட்டிக்கொடுத்த சிறு அவல் மூட்டையுடன் கண்ணனைப் பார்க்க கிளம்பினார்

கண்ணன் , குசேலரிடம் பேசியபடியே, "அண்ணியார் என்ன கொடுத்து அனுப்பினார்?" என்று கேட்ட வாறே குசேலரின் மடியில் கட்டியிருந்த அவல் மூட்டையை உருவி, அதிலிருந்து ஒரு பிடி அவலை உண்டார்.

பின்னர் குசேலரின் வறுமை ஒழிந்தது என நாம் அறிவோம்

அப்படிப்பட்ட குசேலரைப் போல கண்ணனுக்கு நான் அவலையா கொடுத்தேன்..எனக்கு இங்கே தங்கி இருக்க என்ன தகுதி உள்ளது? என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்