Wednesday, October 12, 2016

குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே - 31

காச்யபர் என்ற மகரிஷிக்கு கத்ரு,வினதை என இரு மனைவிகள்.இவர்கள் காச்யபரிடம் புத்திரபாக்கியம் வேண்டும் என வேண்டினர்.

கத்ரு தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என வரம் கேட்டாள்

வினதை தனக்கு அறிவுடை இரண்டு புத்திரர்களைக் கேட்டாள்.அவளுக்கு அருணனும், கருடனும் பிறக்கின்றனர்.சூரியனின் தேரோட்டியாகிறான் அருணன்.

கத்ருவின் ஆயிரம் புதல்வர்களும் ஆயிரம் அரவங்களாக பிறக்கின்றனர்.அவர்களுள் மூத்தவன் ஆதிசேஷன்

ஆதிசேஷன், தன் சகோதரர்கள் எப்போதும் பொறாமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதாலும், கருடனுடன் எப்போதும் சண்டையிடுபவர்களாகவும் இருப்பது கண்டு மனவேதனையடைந்தார்.

பிரம்மாவிடம், "என் மனம் எப்போதும் தர்மசிந்தனையில் இருக்க வேண்டும்" என வேண்டினார்

அதற்கு பிரம்மா, எப்போதும் அதன் மையப்புள்ளியிலிருந்து அசைந்த வண்ணம் இருக்கும் பூமியைஅதன் அச்சிலிருந்துஅசையாது உனது ஆயிரம் தலைகளால் பிடித்துக் கொள்' என்கிறார்.

இந்த பூவுலகை ஆதிசேஷன் தலையில் தாங்கி வருவதாக மகாபாரதம் கூறுகிறது

அப்படிப்பட்ட ஆதிசேஷனை எம்பெருமான் தன் படுக்கையாக்கிக் கொண்டார்.

அந்த ஆதிசேஷன் பிராட்டியுடன் இருக்கும் எம்பெருமானுக்குக் குடையாகவும்,சிங்காதனமாகவும், நிற்கும்போது காலணியாகவும், அவர் பள்ளிக் கொண்டபோது பாற்கடலில் பாயாகவும்,எப்போதும் ஒளி மிகுந்த விளக்காகவும், பரிவட்டமாகவும் அணைத்துக் கொள்ளும் போது தலையணையாகவும் விளங்குவதாகப் பாடல் உண்டு

ஸ்ரீராமானுஜரின் சீடர்களில் ஒருவர் பட்டர்.அவருக்கு சர்வதந்திரஸ்வதந்திரம்
என்னும் சிறப்புப் பெயர் உண்டு.இது பிடிக்காத ஒருவர் அவரை சோதிக்க எண்ணி ஒரு குடத்தினுள் பாம்பு ஒன்றைப் போட்டு அதன் வாயை இறுக்க மூடி அவரிடம் கொடுத்து, "உள்ளே என்ன இருக்கிறது" எனக் கேட்டார்

கையில் குடத்தை வாங்கிய பட்டர்..குடத்தினுள் பாம்பு அசைவதை உணர்ந்தார்."இது எம்பெருமானின் குடை" என்றார்

"பட்டரே! உள்ளே இருப்பது பாம்பு.உங்கள் எண்ணம் தவறு" என்றார் அவர்

அதற்கு பட்டர், "இந்த பாம்புதான் எம்பெருமானுக்கு குடையாக இருப்பதாக பொய்கையாழ்வார் பாடியுள்ளார்' என பதிலுரைக்கிறார்
அந்த குடை முதலானது போல அனந்தாழ்வார் விளங்கினாரே..நான் அப்படியில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்.

No comments:

Post a Comment