Monday, October 10, 2016

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே - 26

கண்ணனும், சுதாமனும் (குசேலரின் பெயர்) சாந்திபனி முனிவரிடம் குருகுலவாசத்தில் கல்வி பயின்று வந்தனர்

ஒருநாள் முனிவர், காட்டிலிருந்து காய்கறிகளும்,அடுப்பெரிக்க சுள்ளியும் கொண்டுவரச் சொல்லி இருவரிடமும் பணித்தார்.இருவரும் அதற்காக காட்டிற்குள் போனபோது, பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது.அதனால் இரவு முழுதும் ஒரு பெரிய மரத்தடியில் தங்கினர்

மறுநாள், முனிவர் இவர்களைத் தேடி வந்த போது, இரவு முழுதும் அவர்கள் பட்ட சிரமங்களைக் கேட்டறிந்தார்.பின், "குருவிற்காக இவ்வளவு துன்பப்பட்ட நீங்கள் பிற்காலத்தில் வளத்துடன் வாழ்வீர்களாக" என ஆசிர்வதித்தார்

அதன்பின்னர்...

துவாரகையில் கம்சனை அழித்த பின்னர் கண்ணன் துவாரகையின் மன்னன் ஆனான்.குசேலரோ அளவிற்கு அதிகமாகக் குழந்தைகளைப் பெற்று வறுமையில் வாடினார்

ஆனால், ஆச்சார்யனின் வாக்கு பலிக்காமல் இருக்கக் கூடாது இல்லையா..

அதனால் , குசேலரின் மனைவியின் மனதிற்குள் புகுந்து கொண்டு கண்ணன் அவளை இப்படி பேச வைத்தான்..

"உங்கள் பால்ய சிநேகிதர், கண்ணன் இப்போது மன்னனாக இருக்கிறார்.அவரிடம் போய் நீங்கள் உதவிக் கேட்கக் கூடாதா"

குசேலரும், மனைவி கட்டிக்கொடுத்த சிறு அவல் மூட்டையுடன் கண்ணனைப் பார்க்க கிளம்பினார்

கண்ணன் , குசேலரிடம் பேசியபடியே, "அண்ணியார் என்ன கொடுத்து அனுப்பினார்?" என்று கேட்ட வாறே குசேலரின் மடியில் கட்டியிருந்த அவல் மூட்டையை உருவி, அதிலிருந்து ஒரு பிடி அவலை உண்டார்.

பின்னர் குசேலரின் வறுமை ஒழிந்தது என நாம் அறிவோம்

அப்படிப்பட்ட குசேலரைப் போல கண்ணனுக்கு நான் அவலையா கொடுத்தேன்..எனக்கு இங்கே தங்கி இருக்க என்ன தகுதி உள்ளது? என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment