Monday, October 24, 2016

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே - 52

கண்ணன் மீது அன்பு மிக்கவன் ததிபாண்டன்.ஆயர்பாடியில் தயிர் விற்பவன்.கண்ணன் அவ்வப்போது இவனிடம் குறும்புகள் செய்வது வழக்கம்

கன்றுகள், தாய்ப்பசுவிடமிருந்து அதிகம் பாலைக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என அதன் வாயைக் கட்டி வைத்திருப்பார்கள்.அதற்கு ததிபாண்டன் காவல்.கண்ணன் அவ்வப்போது அவனுக்குத் தின்பண்டங்களைக் கொடுத்து அவனை வெளியே அனுப்பிவிட்டு பாலைக் குடித்து விடுவான்

அதனால், ஒருநாள் கண்ணனை இதற்கெல்லாம் சேர்த்து பழி வாங்க வேண்டும் என ததிபாண்டன் காத்திருந்தான்

ஒருமுறை, கோபியர்கள் கண்ணனைப் பற்றி யசோதையிடம் புகார் அளிக்க, யசோதை கண்ணனை அடிக்க கையில் ஒரு குச்சியுடன் வந்தாள்.அதைக் கண்ட கண்ணன் அவளது கையில் சிக்கிவிடாமல் ஓடினான்

ததிபாண்டன் இல்லத்தில் பெரிய பெரிய தாழிகளில்தயிர் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும்.அப்படிப்பட்ட காலியான ஒரு தாழியைத் திறந்து அதனுள் அமர்ந்து விட்டான்.இதைப் பார்த்துவிட்ட ததிபாண்டன் அந்தத் தாழியை மூடி அதன் மீது அமர்ந்து கொண்டான்

அங்கு கையில் குச்சியுடன் வந்த யசோதை , அவனைப் பார்த்து, "கண்ணன் இங்கு வந்தானா" என்றாள்

"இல்லையே!" என்றான் ததிபாண்டன்.யசோதை அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.கண்ணன் தாழியைத் திறக்கச் சொல்லியும் ததிபாண்டன் கேட்கவில்லை

:உன்னை வெளியே விட வேண்டுமானால் ஒரு நிபந்தனை" என்றான்

என்ன

"எனக்கு மோட்சம் வேண்டும்.கண்ணா, நீ யாரென நான் அறிவேன்.நீ எனக்கு மோட்சம் கொடுத்தால்தான் உன்னை வெளியே விடுவேன்" என்கிறான் ததிபாண்டன்

கண்ணன் நிஷ்டையில் ஆழ்ந்தான்.வைகுண்டத்திலிருந்து தேருடன் தேவர்கள் வந்தனர்.கண்ணன் அமர்ந்திருந்த தாழியுடன், ததிபாண்டனையும் சேர்த்து வைகுண்டம் எடுத்துச் சென்றனர்

(வைகுண்டம் போனால்..இன்னமும் அப்பானையைப் பார்க்கலாம் என்பது வைணவர்கள் நம்பிக்கை)

இப்படியாக கண்ணனை தாழிக்குள் மறைத்து, அவனைக் காக்க இங்கில்லை என்றேனோ ததிபாண்டன் போல என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

No comments:

Post a Comment